“பாப்பா இன்னிக்கு உனக்கு பர்த்டே. இன்னிக்கும் கடலுக்கு போகணுமா” கயல்விழி மகளின் பிறந்தநாளுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்தபடியே கேட்டார்.
“அம்மா ப்ளீஸ்மா நானும் ஆதியும் போயிட்டு ஈவனிங் திரும்பிடுவோம்” என்று கெஞ்சினாள் மகள்.
“அவ போயிட்டு சீக்கிரமே வந்திருவா” தாத்தா துணைக்கு வந்தார்.
தனது தந்தை அவ்வாறு கூறவும் கயல்விழி மறுத்துப் பேசவில்லை.
மகள் கடல் மேல் கொண்டுள்ள பிடிப்பு அவர் அறிந்ததே. இருப்பினும் இன்று பிறந்த நாள் அன்றாவது முழு நேரமும் தங்களோடு கழிக்க வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால் தேன்மொழி கடலுக்குள் செல்வது கடல் மீதான பிடிப்பினால் அல்ல. செந்தமிழ் மீது கொண்டுள்ள பிடிப்பும் பற்றும் தான் காரணம் என்று தாத்தா மட்டுமே அறிந்திருந்தார்.
செந்தமிழைத் தேடி தீவிற்குச் சென்று ஏமாற்றத்தோடு திரும்பி வந்த போது செந்தமிழ் என்று உரக்க கத்தியபடி கடலுக்குள் குதித்த பேத்தியை அவர் மட்டுமே அறிந்திருந்தார்.
சில நிமிடங்களில் செந்தமிழ் அவளை தனது முதுகில் சிம்மசனமானாய் தாங்கிக் கொண்டு வந்தக் காட்சியையும் அவர் தானே கண்டிருந்தார்.
அன்றிலிருந்து இன்று வரை தேன்மொழியைப் பாராமல் ஒரு நாள் கூட செந்தமிழ் இருந்ததில்லை என்று ஆதி தாத்தா தவிர வேறு யாரும் அறிய வாய்ப்பில்லை தான்.
ஒரு முறை தேன்மொழிக்கு வைரஸ் காய்ச்சல் வந்த போது படுக்கையை விட்டு எழவே சிரமப்பட்டு இருந்தாள்.
கிட்டத்தட்ட ஒரு வாரம் அவள் கடலுக்குள் செல்ல முடியவில்லை.
ஆள் நடமாட்டம் உள்ள இடம் என்று அறிந்த போதும் செந்தமிழ் ஒவ்வொரு இரவும் தேன்மொழியைக் காண மாஹே தீவின் சில்வர் லைனிங் ரிசார்ட் வந்தது அங்கிருந்த யாருக்கும் தெரியாமல் ஆதி பார்த்துக் கொண்டான்.
தேன்மொழியின் காட்டேஜ் பிரைவேட் ப்ராபர்டியாக இருந்ததும் அவர்களின் பிரத்யேக உபயோகத்திற்கு ஒரு பகுதி கடற்கரை இருந்ததும் பெரிதும் துணை புரிந்தது.
இரவு தூங்க முடியாமல் தாத்தாவிடம் அனுமதி பெற்று கடற்கரையில் கனத்த போர்வை போர்த்திக் கொண்டு வெகு நேரம் அமர்ந்திருந்த தேன்மொழி தூரத்தில் தெரிந்த சிவப்பு நிறத்தைக் கொண்டே அது செந்தமிழ் என்று அறிந்து கொண்டாள்.
செந்தமிழ் அவளைத் தேடிக் கொண்டு அவள் இருப்பிடத்திற்கே வந்துவிட்டிருந்தான்.
உடனேயே ஆதியை எழுப்பி யாரும் அப்பகுதிக்குள் நுழைந்து விடாமல் பாதுகாக்க