தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 01 - சித்ரா. வெ
சொர்க்க லோகமே கீழிறங்கி வந்தது போல் அந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி களைகட்டியிருந்தது. சென்னையில் உள்ள அந்த ஸ்டார் ஹோட்டலில் விருந்தினர்கள் வருகையால் கூட்டம் நிரம்பி வழிய, அன்று காலை தான் பழனி முருகன் கோவிலில் தங்கள் திருமணத்தை முடித்துக் கொண்டு, இப்போது உறவினர்கள், மற்றும் நண்பர்களின் ஆசியை நாடி மணமேடை மீது புது மண ஜோடியாக கார்த்திகேயன், நித்ய பூரணி நின்று கொண்டிருந்தனர்.
மறுபக்கம் மேடை அமைத்து இன்னிசைக் குழு தங்களின் மெல்லிய இசை மழையால் விருந்தினர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தனர். அந்த இசை மழையில் சிலர் நனைந்தப்படி அமர்ந்திருந்தனர். சிலர் உறவுகளோடும் நட்புக்களோடும் கதை பேசியபடி அமர்ந்திருந்தனர்.
ஒருபக்கம் அறுசுவை உணவுகள் பஃபே முறையில் வைத்திருக்க, ஒரு கூட்டம் அதை ருசி பார்த்துக் கொண்டிருந்தது. ஆனாலும் அத்தனை பேருடைய கண்களும் அந்த தேவலோக ஜோடி கார்த்திகேயன், நித்ய பூரணியை வட்டமிட்டுக் கொண்டிருந்தது என்று தான் சொல்ல வேண்டும், மேட் ஃபார் ஈச் அதர் என்ற ஆங்கில வார்த்தைக்கு தகுந்தாற்போல் இருவரும் அத்தனை பொருத்தமாக இருந்தனர்.
மணப்பெண்ணுக்கு 19 வயதா? பார்த்தால் அப்படி தெரியவில்லையே, 29 வயதான கார்த்திகேயனை பார்த்தால் மட்டும் அப்படி தெரிகிறதா? என்ன? சிறுவயதிலிருந்தே முறையான உடற்பயிற்சியும் எந்த ஒரு கெட்ட பழக்கமும் அவன் அருகில் நெருங்காததால் பார்ப்பதற்கு 25 வயதுக்குரிய தோற்றம் தான் அவனிடம் தெரிந்தது.
நித்யாவும் அவனுக்கு அருகில் சிறிய பெண் போல் தெரியாமல், அவள் இயல்பிலேயே உயரம் என்பதால், புடவை, நகைகள் என்று அவளது ஆடை அலங்காரம் அவளை அவனது வயதுக்கு இணையான தோற்றத்தோடு காட்சியளிக்க செய்தது. அவர்களை பற்றி விவரம் அறியாதவர்களுக்கு அவர்களின் இந்த பத்து வயது வித்தியாசம் பெரிதாக தெரியாதது போல் கண்ணுக்கு நிறைவாக காட்சியளித்தனர்.
ஆனால் தெரிந்தவர்களுக்கோ அவர்கள் மனதில் அது ஒரு குறையாக தெரிந்தாலும், இப்போது இருவரையும் சேர்த்து ஜோடியாக பார்க்கும் போது அந்த குறைகளெல்லாம் மாயமாக மறைந்து போயிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
அவர்களின் இந்த ஜோடி பொருத்தமே அவர்களுக்கிடையே உள்ள மற்ற பொருத்தங்களையும் ஆராய்ந்து பார்க்க விடாது, ஆனால் எத்தனை பொருத்தங்கள் சரியிருந்தாலும் இல்லாவிட்டாலும் மன பொருத்தம் ஒன்று இருக்க வேண்டுமே, அது இருவரிடமும் இருக்கிறதா? இருவரும் பிடித்து தான் திருமணம் செய்துக் கொண்டார்களா? என்று கேட்டால்,