"இல்ல மாமா எனக்கொன்னும் கேட்க வேண்டாம்.." என்று மட்டும் வெளியில் கூறினாள்.
"சரி அப்போ கிளம்பளாமா? எனக்கு ஆஃபிஸ்க்கு போகணும்.." என்று அவன் சொல்லவும், சரி என்று மண்ணை தட்டிவிட்டு எழுந்தவள், கடல் அலையை ஆசையாக திரும்பி திரும்பி பார்த்தப்படி அவனோடு சென்றாள்.
அன்றிலிருந்து இதோ இப்போது வரையான இந்த நான்கு மாத இடைவெளியில், “கார்த்திக் மாமா என்னை பாட்டி சொன்னாங்கன்னு தான் கல்யாணம் செய்துக்கிறாங்களா? அவங்களுக்கு நான் எப்படி பொருந்தி போவேன், அவங்க எவ்வளவு நல்லா படிச்சு சூப்பரா இங்கிலீஷ் பேசறாங்க.. எவ்வளவு அழகா ட்ரஸ் பண்ணி அழகா இருக்காங்க.. எவ்வளவு பெரிய பிஸ்னஸெல்லாம் ஈஸியா தன்னோட கம்பெனிக்கு கிடைக்கிற மாதிரி செய்றாங்க.. அப்படிப்பட்ட மாமாக்கு எப்படிப்பட்ட பொண்ணு கிடைக்கணும், ஆனா என்னை போய் மாமாக்கு கட்டி வைக்க பாட்டிக்கு எப்படி தான் தோனுச்சோ.." என்று தாழ்வு மனப்பான்மையில் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.
இதோ இப்போது கூட கார்த்திக்கை வாழ்த்த வந்திருக்கும் நண்பர்களையும் அவர்களின் மனைவிகளையும் பார்த்தாள். பெண்களெல்லாம் புடவை, மற்றும் சல்வாரில் வந்திருந்தாலும், அவர்களுக்கு பொருந்தி போவது போல் நேர்த்தியாக உடுத்தியிருந்தார்கள். இதற்கும் அவளை விட அவர்கள் அழகு குறைவு தான், ஆனாலும் அந்த நேர்த்தியாக உடுத்திய உடையே அவர்களை அழகாக எடுத்துக் காட்டியது.
ஆனால் அவளுக்கு அப்படியெல்லாம் உடை உடுத்த தெரியாது. பண்டிகையோ இல்லை பிறந்தநாளோ அன்றைக்கு முந்தைய நாளோ இல்லை அன்றோ தான் வஞ்சி வேலை முடித்து வரும்போது அவளுக்கு புது உடை எடுத்து வருவார். அவள் கொஞ்சம் ஒள்ளியான உடல்வாகு என்பதால், அந்த ரெடிமேட் ஆடை கச்சிதமாக இல்லாமல் லூசாக இருக்கும், அதை அப்படியே தான் போட்டுக் கொள்வாள்.
இங்கு பாட்டி வீட்டுக்கு வந்த பின்பும் கூட குறிஞ்சியம்மாள் சுடிதார் மெட்டிரியல் எடுத்துக் கொடுத்தால் அதை அவளிடம் இருக்கும் உடையின் அடையாளத்திற்கே தைத்துக் கொள்வாள். குறிஞ்சியம்மாளும் பழைய காலத்து ஆள் என்பதால் அவளை மாற்ற நினைக்கவில்லை, அதேபோல் வஞ்சிக்கும் அதெல்லாம் தெரிவதில்லை.
இந்த திருமணம் முடிவான போது தான், ஞானசெல்வம் பிரத்யேகமாக ஆடை வடிவமைப்பவரை அழைத்து வந்து திருமணத்திற்கான உடைகளையும் அதன்பின் போட்டுக் கொள்வதற்கான சில உடைகளையும் தைக்க ஏற்பாடு செய்தார்.