கஷ்டத்தை பார்த்து வளர்ந்ததால், சின்ன சின்ன ஆசைகளை கூட மனதில் மறைத்துக் கொள்வாள். வஞ்சி தான் மகளுக்கு என்று ஏதாவது பார்த்து பார்த்து செய்வார். அவளாக வாய் திறந்து எதுவும் கேட்க மாட்டாள். அதேபோல் அன்னை எடுக்கும் முடிவுக்கும் மறுப்பு சொல்ல மாட்டாள்.
இப்போது திருமண விஷயத்திலும் அதுவே நடக்க, அவளும் மனதில் குழப்பத்தோடு திருமணத்திற்கு சம்மதித்தாள். இதில் கார்த்திக் வேறு தனியாக பேச வேண்டுமென்று அழைத்துச் சென்றான்.
அதுவும் கடற்கரைக்கு, அவள் இருந்த ஊரில் கடல் இருந்ததில்லை, அதனால் சிறு வயதிலிருந்தே சினிமாவில் கடலை பார்க்கும் போது கரையில் நின்று கடல் அலையில் கால் வைக்க ஆசை, இப்போது கடலை அருகில் பார்க்கவும், அவளுக்கு அந்த ஆசை தலை தூக்க, "மாமா கடல்க்கிட்ட கூட்டிட்டு போவாங்களா?" என்பது போல் அவள் ஆசையாக பார்த்துக் கொண்டிருக்க,
அவனோ மணல் பரப்பிலேயே அவளை அமர வைத்து, "உனக்கு விஷயம் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் நித்யா.. பாட்டி நமக்கு கல்யாணம் செஞ்சு வைக்க விருப்பப்பட்றாங்க.. என்கிட்ட அதைப்பத்தி பேசினாங்க.. எப்படி பாட்டிக்கு இப்படி ஒரு எண்ணம் தோனுச்சுன்னு எனக்கு தெரியல.. நம்ம ரெண்டுப்பேருக்கும் வயசு வித்தியாசம் நிறைய.. அதைப்பத்தி பாட்டிக்கிட்ட பேசிப் பார்த்தேன்.. ஆனா அவங்க பிடிவாதமா இருக்காங்க..
அம்மா என்னோட டீன் ஏஜ்லயே இறந்துட்டாங்க.. அப்பாவும் பிஸ்னஸ் பிஸ்னஸ்னு ஓடிட்டே இருப்பாரு.. எனக்கு அப்போ எல்லாமாவா பாட்டி தான் இருந்தாங்க.. அதனால் அவங்க பேச்சை என்னால மீற முடியாது.. நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டேன்.. ஆனா உனக்ககுன்னு ஏதாச்சும் ஆசை இருக்குமில்ல.. உனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லன்னா சொல்லலாம்.. நான் பாட்டிக்கிட்ட பேசறேன்.." என்றான்.
"நான் ஏற்கனவே அம்மாக்கிட்ட சம்மதம் சொல்லிட்டேன் மாமா.. எனக்குமே அம்மா என்ன சொல்றாங்களோ அதுக்கு மறுப்பு சொல்லமாட்டேன் மாமா.." என்றாள்.
"அப்போ பாட்டிக்கிட்ட ஓகே சொல்லிட்றேன், சரியா?" என்றவன், "உனக்கு என்கிட்ட வேற ஏதாச்சும் கேட்கணுமா?" என்றுக் கேட்டான்.
என்ன கேட்க வேண்டும்? நீ என்னை பிடித்து தான் திருமணம் செய்துக் கொள்கிறாயா? இல்லை பாட்டி சொன்னார்கள் என்று திருமணம் செய்துக் கொள்கிறாயா? அது தான் எனக்கு தெரிய வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாளே தவிர, அதை வெளியில் சொல்லவில்லை,