அதற்கு அவர்கள் இருவரும் தான் பதில் கூற வேண்டும்,
ஆனால் இந்த அதி முக்கியமான கேள்வி தோன்றியதே மணப் பெண்ணான நித்ய பூரணிக்கு தானே, "கார்த்திக் மாமா என்னை பிடித்து தான் மணந்தாரா? அவருக்கு நான் பொருத்தமானவள் தானா? என்ற கேள்வியை தாங்கியப்படி தான் அவள் மணமேடையில் தன் கணவன் அருகே நின்றுக் கொண்டிருந்தாள்.
இந்த கேள்வி இப்போது அவளுக்கு தோன்றியதில்லை, இவர்கள் திருமணம் பற்றி இவர்களின் பாட்டி குறிஞ்சியம்மாள் பேசியதிலிருந்தே அவளுக்கு தோன்றிய ஒன்று, ஆனால் அதற்கான விடை கிடைக்கும் முன்னரே, அவளுக்கும் அவளது தாய்மாமன் மகன் கார்த்திகேயனுக்கும் திருமணமே முடிந்துவிட்டது.
தாய்மாமன் மகனாக இருந்தாலும் அவளுக்கு கார்த்திகேயனை ஒரு வருடமாக தான் தெரியும், அவளுக்கு கருத்து தெரிந்ததிலிருந்து அன்னை, தந்தையை தவிர அவளுக்கு யாரையும் தெரியாது. எந்த உறவுக்காரர்களோடும் ஒட்டி உறவாடாமல் அவளின் பெற்றோர்கள் தனியாக தான் இருந்தனர்.
தன் பிறந்த வீட்டில் உள்ளவர்களிடம் உறவை முறித்துக் கொண்டு அவளின் தந்தை இந்த ஊருக்கு தன்னை அழைத்து வந்து விட்டதாக அவளின் அன்னை வஞ்சி அடிக்கடி சொல்வார். ஆனால் பிறந்த வீடே வேண்டாமென்று மனைவியை கூட்டி வந்த பிறகு, அவளின் பிறந்த வீட்டை விட நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டியது கணவனின் கடமை அல்லவா? ஆரம்பத்தில் அப்படித்தான் நித்யாவின் தந்தை அவளின் அன்னையை நன்றாக பார்த்துக் கொண்டார். ஆனால் அதன் பிறகு குடிப்பழக்கம் அவரை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொண்டு வீட்டுப் பொறுப்பை தட்டிக் கழிக்க ஆரம்பித்தார்.
வீடு கஷ்டமான சூழ்நிலைக்கு ஆளாக, வஞ்சி தான் வேலைக்கு செல்ல வேண்டியதாக இருந்தது. அவர்கள் இருப்பிடமும் வாடகைக்கு விட்டிருந்த ஒரு குடிசை வீட்டில் வாழ வேண்டுமென்ற நிலைக்கு வந்துவிட்டது. நித்யாவையும் ஒரு அரசுப் பள்ளியில்தான் சேர்த்திருந்தார்கள்,
அவள் பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கவும், அந்த நேரத்தில்தான் அவளின் தந்தைக்கு குடிப்பழக்கத்தால் உடல்நலம் மோசமாகி படுத்த படுக்கையானார். வஞ்சிக்கு கணவனோடு இருந்து கவனித்துக் கொள்ள முடியாமல், வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம், அதனால் நித்யாவை கல்லூரியில் சேர்க்காமல், அவளை தன் தந்தையைப் பார்த்துக் கொள்ள வீட்டிலேயே இருக்க வைத்து விட்டார்.
அவளுக்கும் பத்தாவது வரை தமிழ் வழி கல்வி படித்ததால் நன்றாகவே படித்து வந்தாள்.