அவங்களையுமே வீட்டை பார்த்துக்கோங்கன்னு சொல்லி விட்டாச்சு.. எனக்கு இப்போ நினைச்சா கில்டியா இருக்கு..
நாம எங்க ஹனிமூன் போகலாம்னு கேட்டப்போ.. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடுன்னு நிறைய இடம் சொன்ன இல்ல.. எதுவுமே நீ பார்த்ததேயில்லை.. அதை புரிஞ்சிக்காம நான் பார்த்துட்டேன்னு சொல்லி அந்த இடமெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டேன்.. இப்போ யோசிச்சா கஷ்டமா இருக்கு நித்தி.." என்று அவன் இன்னுமே புலம்ப,
எழுந்து அவன் அருகில் அமர்ந்தவள், "எப்படியோ ஏதாவது ஒரு ஊருக்கு தானே மாமா ஹனிமூன்க்கு போக முடியும்.. கேரளாவும் நான் பார்க்காத ஊர் தானே, நீங்களும் கேரளாக்கு வந்ததில்லல்ல.. அதனால் இங்க வந்தது எனக்கு சந்தோஷம் தான் மாமா.. இன்னொருமுறை உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது அம்மா, மாமா, பாட்டி எல்லோரடவும் ஊட்டி இல்ல கொடைக்கானல் போகலாம்.." என்று அவனை சமாதனப்படுத்தினாள்.
"ம்ம் நீ சொல்றது போல அத்தையை கூட்டிட்டு போறது போல ஏதாவது ஒரு ஊருக்கு டூர் போகலாம்.. அப்புறம் நான் கேரளாவும் ஏற்கனவே பார்த்தது தான், ப்ரண்ட்ஸோட வந்திருக்கேன், இதுபோல ஹவுஸ் போட்லயும் தங்கியிருக்கேன்.. ஆனா ப்ரண்ட்ஸோட போனது ஒரு ஜாலி.. ஆனா உன்னோட இப்போ வந்திருக்கிறது ரொம்பவே ஸ்பெஷல் பொண்டாட்டி.." என்று கிறக்கத்தோடு சொல்ல, அவளுக்காக அவன் யோசித்ததே அவளுக்கு நிறைவை கொடுத்திருக்க, அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள். அன்றைய இரவு கணவனாய் அவன் தேடலுக்கு மனைவியாய் மகிழ்ச்சியோடு ஒன்றிப் போனாள்.
மறுநாள் மனதில் நிறைவோடு மூனாருக்கு சென்றார்கள். அங்கு ஒரு ரெசார்ட்டில் தங்குவதற்கு முன்பே ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, பயணம் செய்த களைப்பில் ஓய்வெடுத்து, பின் மதிய உணவை முடித்துக் கொண்டு சுற்றிப் பார்க்க செல்லலாம் என்ற திட்டத்தோடு இருவரும் அவர்கள் தங்கப் போகும் அறைக்குச் சென்றனர். அது தனித்தனி குடில்கள் போல் அமைந்த ரெசார்ட் என்பதால், ஒரு பாதையிலிருந்து அங்கங்கே அமைந்திருக்கும் குடில்களுக்கு தனித்தனி பாதையாக பிரிந்து சென்றது.
அதில் அவர்கள் இருக்க போகும் குடிலுக்கு என்று ஒரு எண் கொடுக்கப்பட்டிருக்க, அதை தேடி கார்த்திக் நித்யாவை கூட்டிச் செல்ல, அவளோ சுற்றும் முற்றும் வேடிக்கைப் பார்த்தப்படியே கார்த்திக்கின் பின்னால் சென்றாள்.
இருவரும் அறைக்கு சென்றதும் பயண களைப்பில் அப்படியே கட்டிலில் விழுந்தவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்ததும், "நாம ரெண்டுப்பேரும் ரெடியாகி நேரா ரெஸ்ட்டாரண்டில் சாப்பிட்டிட்டு அப்படியே கிளம்புவோம் நித்தி.. முதலில் நான் குளிச்சுட்டு வரேன்.." என்று சொல்லி முதலில்