தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 06 - சித்ரா. வெ
முதல்முறை விமானத்தில் ஏறி அமர்ந்ததும் நித்யா எந்த உணர்வுக்கு ஆளானாள் என்று அவளுக்கே புரியவில்லை, ஆகாயத்தில் பறக்க போகிறோமே என்ற ஆனந்தமா, அத்தனை உயரத்தில் பயணிக்க போகிறோமே என்ற பதட்டமா? எது என்று அவளுக்கு தெரியவில்லை.
ஆனால் இத்தனை நாள் எந்த ஊரையும் பார்த்ததில்லையே என்ற ஏக்கமெல்லாம் இந்த சிறிது நேர விமான பயணத்திலேயே தீர்ந்துவிட்டதாக தான் அவள் உணர்ந்தாள். மொத்தத்தில் அவள் பரவச நிலையில் இருந்தாள்.
குழந்தைகளின் ஆசையை தீர்த்து வைப்பதற்காக வேலைக்கு செல்வதற்கு முன் தங்களின் இருச்சக்கர வாகனத்தில் அமர வைத்து தெருவை ஒரு சுற்று சுற்றி வந்து விட்டுவிட்டு செல்வார்களே, அப்படி சென்னையிலிருந்து கொச்சின் செல்பவர்கள், மீண்டும் அடுத்த விமானம் பிடித்து சென்னைக்கு வந்துவிட்டிருந்தாலே அவளுக்கு அதுவே நிறைவை கொடுத்திருக்கும், அத்தனை மகிழ்ச்சியோடும் சிறிது பயத்தோடும் கார்த்திக்கின் கையைப் பிடித்தப்படி அந்த விமான பயணத்தை கழித்தாள்.
சீட் பெல்ட் போட அவன் உதவ, ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தவள், தரையிலிருந்து விமானம் ஏறுவதை கண்கொட்டாமல் பார்த்தப்படி வந்தாள். அதன்பின்பும் கூட விமானம் வானத்தில் பறந்துக் கொண்டிருந்தாலும் அடிக்கடி ஜன்னலிலிருந்து கீழே என்ன தெரிகின்றது என்று பார்த்தப்படியே வந்தாள்.
விமான நிலையத்தில் நுழைந்ததிலிருந்தே அவளின் குழந்தைத்தனமான செயல்களை கார்த்திக் ரசித்தப்படியே வந்தவன், விமானத்திலும் அவள் செய்கைகளை ரசித்துக் கொண்டு வந்தவன், யாரும் பார்க்கிறார்களா? என்று ஒருமுறை பார்த்துக் கொண்டு, "ஹே பொண்டாட்டி.. என்னை கொல்றடி.." என்று அவள் காதில் கிசுகிசுத்தப்படி அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்.
அதில் வெட்கம் கொண்டவளாக, "மாமா யாராச்சும் பார்க்க போறாங்க.." என்று அவளும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டாள்.
மீண்டும் விமானம் தரையிறங்க போகிறது என்று தெரிந்தும், அப்படியே கண் கொட்டாமல் பார்த்தப்படியே வந்தாள்.
விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் ஒரு டூரிஸ்ட் கைட் அவர்களுக்காக காத்திருந்தவன், அவர்களை தான் கொண்டு வந்த காரில் ஏற்றிக் கொண்டு ஆலப்புழா சென்றான்.
அங்கே படகு வீட்டில் தங்குவதற்காக முன்பதிவு செய்திருந்ததால் அதில் பயணிக்க தயாரானார்கள். இருவரும் தேனிலவுக்காக வந்திருந்ததால் அவர்கள் மட்டும் தனித்து இருப்பதற்காக ஒரு படுக்கையறைக் கொண்ட படகு வீட்டை கார்த்திக் ஏற்பாடு செய்திருந்தான்.