இருக்க இருக்க பெருசா தான் ஆகும், என் பொண்டாட்டியோட மனக்கசப்பை எப்படி போக்கன்னு எனக்கு தெரியும், அவ வரமாட்டேன்னு அடம்பிடிச்சா, அவளை நான் தூக்கிட்டு போவேன்." என்று சொல்லியவன், அதை செயல்முறையிலும் காட்ட,
"விடுங்க மாமா, நானே வரேன்." என்று சொல்லியும், அவளது பேச்சை கேட்காமல் அவளை தூக்கிச் சென்றான்.
அதைப்பார்த்து வஞ்சியின் கண்கள் கலங்கிவிட்டது. எதற்குமே மகளை திட்டவோ, அடிக்கவோ செய்யாதவர், இன்று அதை செய்தார் என்றால், அதுவும் தன் மகளுக்காக தான், கனவிலும் நினைக்காத நல்ல வாழ்க்கை மகளுக்கு கிடைத்திருக்க, அவளது அப்பாவித்தனத்தால், எங்கே அதை இழந்துவிடுவாளோ என்று பயத்தில் தான் அப்படி நடந்துக் கொண்டார். இப்போது கார்த்திக்கின் செயலை பார்த்ததும், அப்படி ஏதும் நிகழ வாய்ப்பில்லை என்பதால் மகிழ்ச்சியில் அவருக்கு அழுகை வந்துவிட்டது.
"என்னோட பேரனை பத்தி எனக்கு தெரியும், அவன் தான் என் பேத்திக்கு ஏத்தவன்னு தெரிஞ்சதால தான், அவங்களுக்கு கல்யாணம் செய்து வைக்கும் முடிவுக்கே வந்தேன். அது எப்போதுமே தோத்து போகாது, கார்த்திக் அதை தோத்து போக விடமாட்டான்." என்று குறிஞ்சியம்மாள் பெருமையாக தன் மகன், மகளிடம் கூறினார்.
அறைக்குள் வந்ததும் அவளை மெத்தையில் அமர வைத்தவன், "என்னோட பொண்டாட்டிக்கு கோபம் வரும்னு இப்போ தான் தெரிஞ்சுக்கிட்டேன்." என்று புன்னகையோடு கூற,
"தப்பு செஞ்சது நான், அப்புறம் இதுல கோபப்பட எனக்கு என்ன தகுதியிருக்கு," என்றவள், தலைகுனிந்துக் கொண்டாள்.
"நித்தி, தப்பு செய்யாத ஆளுங்கன்னு யாருமே இல்ல, அதை திருத்திக்க முயற்சி செய்யணும், அதை விட்டுட்டு தப்பு செஞ்சுட்டேன். தப்பு செஞ்சுட்டேன்னு புலம்பறதால ஒன்னும் ஆகாது," என்று அவன் சொல்ல,
"ஒன்னு ரெண்டுன்னா பரவாயில்ல, செய்றது எல்லாமே தப்பா போனா என்ன செய்றது? நானும் இனி தப்பா எதுவும் செய்திடக் கூடாதுன்னு நினைச்சு அதுக்கான முயற்சியும் எடுக்கிறேன். ஆனா அப்படியும் அது தப்பா தான் போகுது, ஆனா அதனால எனக்கு இழப்புன்னா பரவாயில்லை, மத்தவங்களுக்கு இழப்புன்னா, அது பெரிய தப்பு தானே,
உங்களுக்கு எத்தனை பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி கொடுக்க பார்த்தேன். இனியுமே அப்படி செய்யாம இருப்பேன்னு என்ன நிச்சயம்? நீங்க கோடிக் கணக்குல பிஸ்னஸ் செய்றீங்க, ஆனா நான் கோடின்னு பேப்பர்ல எழுதி தான் பார்த்திருக்கேன். எனக்கு இதெல்லாம் புரியுமா?
உங்களுக்கு நான் ஏணி வச்சா கூட எட்ட மாட்டேன் மாமா. படிப்புல, அறிவுல, அந்தஸ்துல