“நீ என்ன செய்ய போகிறாய்?”
“மதிய சமையலுக்கு ரெடி பண்ணுவேன்”
அவன் ஒரு அடி முன் வைத்து சமையலறைக்குள் நுழைந்தான். அலமாரியில் இருந்த மளிகை பொருட்களையும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களையும் பார்த்தான்.
“ம்… இத்தனை ‘வெப்பன்’ஸை வைத்துக் கொண்டுதான் சமையல் சமையல் என்று வித்தை காட்டுகிறாயா?”
“எல்லா சமையலறையும் இப்படித்தான் இருக்கும். நீங்கள் உங்கள் வீட்டு சமையலைறைக்குள் சென்றதே இல்லையா?”
“அதுக்கில்லை… காட்டில் ஐந்து நாட்கள் வசிக்கணும்னு சொல்லியிருக்கே. உன்னை நம்பி காட்டில் ஐந்து நாட்கள் வசிப்பது சிரம்மாக இருக்காதுன்னு நினைச்சேன்”
“என்ன சிரமம்? சாப்பாட்டிற்கா…? ம்.. அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நாம எப்படியாவது அந்த கோர்ட் ஆர்டரை வெற்றிகரமாக முடிக்கணும். அப்போதுதான் நமக்கு டைவர்ஸ் கிடைக்கும்” சொல்லியபடி… முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று… ஏதோ ஒரு சாதனையை செய்யப் போவதுபோல போஸ் கொடுத்தாள்.
என்ன ஒரு ஆர்வம்!
அவள் பேசும் தோரணையை பார்த்தால்… ஒரு மாதம் ட்ரைனிங்கும் முடிந்து கோர்ட்டுக்கு போய் அந்த கவுன்ஸிலர் முன் அதிதி சென்று சுதந்திரத்திற்காக போராடிய வீர மங்கைபோல நின்று விவாகரத்தை வாங்கி விடுவாள் போலிருக்கிறதே?
அப்படி மட்டும் நடந்து விட்டால் அதிரதன் வீடு கடத்தப்படுவது உறுதி! (அதாவது நாடு கடத்தப்படும் தேச துரோகியை நாட்டை விட்டு துரத்துவதுபோல வீட்டைவிட்டு துரத்தி விடுவார்கள்).
“என்ன அப்படியே பார்த்துட்டு இருக்கீங்க. சம்பத் அண்ணா வந்துட்டாங்க. வாங்க” என்று அவனை அழைத்துக் கொண்டு ஹாலுக்கு விரைந்தாள்.
“வாங்கண்ணா” என்று சம்பத்தை வரவேற்றவள்,
“சம்பத் அண்ணா யார் தெரியுமா? தலைவர் அங்கிளோட மகன். விவசாயி. அவர் சிறந்த வேளாண்மைக்காக பரிசெல்லாம் வாங்கி இருக்கார்.” என்று அறிமுகம் செய்தார்.
“ஏம்மா நீ என்னை புகழ்ந்துட்டு இருக்கே. மாப்பிள்ளையோட பெருமைக்கு முன் நான் எம்மாத்திரம்” என்று வெட்கப்பட்டுக் கொண்டே பேசிய சம்பத்தை அவனுக்கு பிடித்து போயிற்று.