“ அப்படி கிடையாது. விவசாயியைவிட உயர்வானவர் யாருமில்லை. அப்படின்னு வள்ளுவர் சொல்லி இருக்கார். ஏர் பின்னது உலகம். வாங்க சம்பத் சாப்பிட்டுட்டே பேசலாம்” என்று அவனையும் அழைத்து காலை உணவை அருந்தினான்.
“வாங்க மாப்பிள்ளை எங்களோட வயக்காட்டை சுற்றி பார்க்கலாம்” என்று அழைத்தான்.
“வருகிறேன். ஆனால் என்னை மாப்பிள்ளை என்று சொல்ல வேண்டான் அதிரதன்னு சொல்லுங்க.”
“சரிங்க அதிரதன்” என்று ஒப்புக் கொண்டவனுடன் நடந்தான்.
சம்பத்தின் வயல்காடு ஊருக்கு வெளியே இருந்தது. அதை ஒட்டிதான் காட்டு பகுதி ஆரம்பித்தது. நெல் வயல்… பக்கத்திலேயே காய்கறி விவசாயம்… இவற்றிற்கு வேலி போல அமைந்த தென்னை மரங்கள்… பாத்தி கட்டி ஓடிய சிறு ஓடை…இவற்றை ரசித்துக் கொண்டெ அன்றைய பொழுது கழிந்து போனது.
மதிய உணவிற்கு பின் அதிதியுடன் பொதுவாக பேசினான்.
“நீங்க அறிவியல் ஆராய்ச்சி செய்றீங்கன்னு சொன்னாங்க”
“ஆமாம் மரபணு தொடர்பான ஆராய்ச்சிகள்”
“மரபணுவா… இந்த பிடி கத்தரிக்காய்… தக்காளி இவற்றை உருவாக்கும் வேலையா?”
ஆவ்…. மரபணுபற்றி கிராமம்வரை தெரிந்திருக்கிறதே!
“ஆங்… அப்படி இல்லை”
“நல்லது அதையெல்லாம் செய்யாதீங்க. பிடி காய்கறினால எவ்வளவு பிரச்சினை வந்திருக்கு தெரியுமா?”
“தெரியும். ஆரம்பத்தில் நல்லது செய்யவென்று ஆரம்பித்த ஒன்று இப்போது கெட்டதாக முடிந்து விட்டது. புழு தாக்காமல் இருக்கவும்… அதிகமாக காய்க்கவும் என்று உருவாக்கப்பட்ட அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக தெரியவும் தடை போட்டு விட்டனர். அது பெரிய கதை பிறகு சொல்கிறேன்”
“பின்னாளில் பேச நிறைய விசயங்கள் இருக்குபோல” என்று சிரித்தபடி எழுந்தாள்.
அப்புறம் அந்த நாளும் இருள் சூழ இரவை வரவேற்க ஆரம்பித்தது. முன்னிரவைபோலவே உணவு உண்டு முடித்து அறைக்குள் அதிதி உறங்க… கூடத்தில் அதிரதன் உறங்க ஆரம்பித்தான்.
நேற்று நடந்தது மாயை… கனவிற்குள் வந்த நினைவு என்று அதிரதன் தன்னை தேற்றிக் கொண்டு உறங்க ஆரம்பித்தான்.