கிளைமேட்… தித்திக்கும் சிறுவாணி தண்ணீர்… அழகான ஆனைமலை தொடர்… மனம் விரும்பும் ஊட்டி… முக்கியமாக ஊட்டிமேல்தான் அவனுக்கு ஆர்வம் அதிகரித்திருந்தது. ஏர்போர்ட்டில் இறங்கவுமே தன் குடும்பத்தினரை பார்த்து மகிழ்ச்சி தெரிவித்தான். பெற்றோரின் காலை தொட்டு வணங்கினான்.
“அண்ணா… “ என்று துள்ளிக் கொண்டு ஓடி வந்த கற்பகம் அவனுக்கு பூங்கொத்தினை தந்து வரவேற்றாள். காதில் ஜிமிக்கி குலுங்க… கால்களில் ஜலஜா மாடல் கொலுசு ஒலிக்க… வட இந்திய மாடல் பிங்க் நிற பைஜாமா அணிந்து வெள்ளை தேவதை என எதிரே நின்ற தங்கையை பார்த்து பூரித்து போனான்.
“முன்னி டார்லிங் எப்படி இருக்கே” என்று கேட்டபடி கை பிடித்து ஆசுவாசமானான்.
“அச்சி ஹே அண்ணா.. நீங்க வந்துட்டீங்கல்ல ஜாலிதான்…”
“ஆமாம் உன்னுடைய சொர்க்க பூமியை பார்க்கணும்னு நான் காத்திட்டு இருக்கேன்” பேசிக் கொண்டே காரில் ஏறினார்கள். பின் இருக்கையில் அப்பா அம்மா அமர முன் இருக்கையில் கற்பகம் அமர, க்ருபாதான் காரை ஓட்டினான்.
கற்பகம் வழி சொல்ல சொல்ல காரை ஓட்டியவன்,
“இந்த ஊரைபற்றி சொல்லு முன்னி. அப்படியே வர்ணனையோட சொல்லு”
“ஆங்… இப்போ என்னோட கவனம் கோயமுத்தூரைவிட்டு விலகிடுச்சு. ஊட்டிதான் என்னோட ஃபேவரிட்”
“அந்த மலைபிரதேசமா…? ரொம்ப அழகானதா?”
“சூப்பரா இருக்கும்ணா… அந்த மலைப்பாதை வளைஞ்சு வளைஞ்சு… போகும். இரண்டு பக்கமும் ரொம்ப உயரமா காட்டு மரங்கள் இருக்கும்… அப்பறம் அந்த அருவி ரொம்ப அழகா இருக்கும்… நம்ம ஊரு லோனேவாலே மாதிரி இருக்கும்.”
“மும்பை விட்டு இங்கே வந்தப்போ நீ லோனேவாலேவை மிஸ் பண்றதா சொன்னியே… இப்ப அந்த கவலை இல்லே போல…”
“ஆமாம்… கூடுதலா இங்கே ஒரு மனம் கவர்ந்த விசமும் இருக்கு…”
“மனம் கவர்ந்த…?”
“மிஸ்.துளசி.. என்னோட குட் ஃப்ரெண்ட்.. அவள் ஊட்டிலதான் இருக்கா… இங்கே காலேஜ் படிக்க வந்திருக்கா… ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறா… நம்ம வீட்டுக்குகூட வருவா. அதுனால நானும் அவளோட ஊட்டி வீட்டிற்கு போனேன். அந்த இடம் எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு”
“கொஞ்சம் மூச்சு விடுகிட்டு பேசும்மா… தடக்குன்னு நின்னுட போகுது. எதுக்கு இவ்ளோ எக்ஸைட் ஆகுற?”