“அம்மாக்கு அவளை மருமகளாக்கிக் கொள்ளணும்னு ஆசை இருக்கு” கற்பகம் சொல்லவும் கிருபா அமைதியானான். சாலையை பார்த்தபடி காரை ஓட்டினான். ஆனால் கற்பகம் அவனையே விடாமல் பார்த்துக் கொண்டிருந்ததால்…
“ம் இது நடக்காது முன்னி” என்றான்.
“ஏன் அண்ணா… துளசி நல்ல பெண்தானே. உனக்கு பிடிச்சிருக்குன்னு சொன்னியே”
“பிடிச்சிருக்குன்னா இப்படி எடுத்துக்ககூடாது… முன்னியை எனக்கு எப்படி பிடிக்குமோ அதேபோல பிடிச்சிருக்குன்னு சொல்லலாம்”
ஏமாற்றமாக அவனை பார்த்தவள்,” எனக்காக ஒரு முடிவிற்கு வரலாமே…” என்றாள்.
“முன்னிக்காக கடலில் குதிக்கணும்னாலும் நான் செய்வேன். ஆனால்”
“ஏன்ணா… அவங்க மிடில் க்ளாஸ்ங்கறதாலயா?”
“ப்ச்… முன்னி நீ இவ்வளவு சீரியஸா இருப்பேன்னு நான் நினைக்கல…ம்… உங்கிட்ட ஒரு விசயம் சொல்லணும்…” தயங்கினான்.
“சொல்லுங்க… நான் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்”
“அது நான் ஜெர்மனியில் என்னோட படிச்ச பெண்னை காதலிச்சேன்… அவளைத்தான் கல்யாணம் செய்துக்கணும்னு இருந்தேன். நம்ம ஊர் பொண்ணுதான்…”
“என்னாச்சு… ப்ரேக்-அப் ஆகிடுச்சா?”
“அது… அவள் ஒரு ஆக்ஸிடெண்ட்ல செத்து போயிட்டா… அவளை மறக்க…” அவன் குரல் தேய்ந்தது.. கற்பகத்திற்கு அதிர்ச்சியாக இருந்தது. அவளுடைய ஹேண்ட்ஸம் அண்ணனுக்கு காதல் இருந்தது என்பது அதிர்ச்சி இல்லை… ஆனால் அவள் இறந்து போய்விட்டாள் என்பதுதான் அதிர்ச்சியாக இருந்தது.
‘சொல்லும்போதே கிருபா அண்ணன் முகம் கலங்கி போய் விட்டதே. ரொம்பவும் ஆழமான நேசிப்பு இருந்திருக்கும் போலியே’ அவளும் கலங்கினாள். அவளுக்கு துளசியின் நினைவு மறந்து விட்டது.
“அண்ணா மாப் கீஜியே… மன்னிச்சிடுங்க… நான் உங்களை அழ வச்சிட்டேன். உங்களுக்கு நடந்தது கேட்டால் ரொம்பவும் துக்கமாக இருக்கு.”
“அது நடந்து இரண்டு வருடங்கள் ஆயிற்று முன்னி… ஆனாலும் அதை மறக்க முடியவில்லை. திருமணம்பற்றி நினத்து பார்க்கவும் முடியவில்லை.”
“இங்கே வந்தால் கல்யாணம் செய்துக்க சொல்லுவாங்கன்னுதான் வரவேயில்லையா? ஆனால் காலம் முழுவதும் இப்படியே இருக்க முடியாதே”