"எனக்கு தெரியாதுங்க.. ஆனால் அதிதியை அவளுக்கு பிடிக்கவில்லை என்று தெரியும். மத்த விஷயங்களை நீங்கதான் விசாரிக்கணும்"
அஞ்சலயை பஞ்சாயத்தினர் விசாரிக்க துளசிக்கு கன்னியம்மா செய்த சதியும் வெளியானது.
கையில் வைத்திருந்த ரிப்போர்ட்டை படித்து காட்டி அதிரதன் விளக்கினான். அதிதிக்கு மட்டுமல்ல துளசிக்கும் இதுதான் நடந்தது என்று உறுதிபட பேசினான்.
"இன்னும் நம்பிக்கை வரவில்லை எனில் அதிதியை இங்கு அழைத்து வந்து காட்டுகிறேன். அவளுடைய நடவடிக்கைகள் பார்த்து முடிவெடுங்கள்"
"அதெல்லாம் வேண்டாம் மாப்பிள்ளை… துளசிக்கு நடந்த துரோகம் புரிந்து விட்டது. இப்போது அஞ்சலயை என்ன செய்யணும் என்று தீர்மானம் செய்யணும்"
"அதுக்கு அதிதியின் கருத்தையும் கேட்கணும். பஞ்சாயத்து நாளைக்கு திரும்பவும் கூடணும்" என்று தலைவர் முடித்தார்.
அதிதியின் அம்மாமீது படிந்து இருந்த கறையை துடைத்தாகி விட்ட நிம்மதி அதிரதனுக்கு வந்தது. இனி 'அது'பற்றி தெரிய வேண்டும்.
அவன் நினைத்த அந்த நொடியில் அதற்கான ஆரம்பத்தை கங்காதரனை பார்த்து கத்திய அஞ்சலை துவக்கி வைத்தாள்.
"ஏய்… இதெல்லாம் உன் வேலையாக்கும். செத்து போனவளை உத்தமியாக காட்டி உன்னோட மச்சானை நல்லவனாக்க பாக்குறியா?. அவன் உயிரோட இருக்கானா இல்லை செத்துட்டானா?"
இதை கேட்ட அதிரதன் திடுக்கிட்டான். அவள் க்ருபா அங்கிளையா சொல்கிறாள்? அவனுக்கு தெரியாத ரகசியம் இன்னும் இருக்கிறதா? ஒருவேளை… அதிதி சொன்ன 'அங்கிள்.' க்ருபா மாமாதானா?. மை காட்..!
கேள்விகள் கண்களில் தெறிக்க அப்பாவை திரும்பி பார்த்தான்
தொடரும்