சிகிச்சை தந்து, கையில் கட்டுப் போட்டபடி ஒரு மாதம் படுக்கையில் கிடந்தபின், வடிவு குணமடைந்தாள்.
இன்று மறுபடியும் பலவந்தப்படுத்திய அந்த கொடுமைக்காரி, கோபத்தில் வடிவை வயிற்றில் கத்தியால் குத்த வந்தபோது, வடிவு சாமர்த்தியமாக கொடுமைக்காரியின் கையில் இருந்த கத்தியை பிடுங்கி, ஆத்திரத்தில் கொடுமைக்காரியின் வயிற்றில் ஆழமாக செருகிவிட்டு, தப்பித்து ஓடிவந்தவளைத்தான், ரௌடிகள் துரத்தி வந்தனர்.
" ஐயா! இந்தப் பெண்ணை நான் காப்பாத்தறேன். நீங்க கவலைப்படாம, கிளம்புங்க!"
என போலீஸ் அதிகாரி கூறியதும், இங்கர்சால் வேனிலிருந்து இறங்கினார்.
வேன் திரும்பிச் சென்றதும், நடுவீதியில் நின்றிருந்த இங்கர்சால் அருகிலிருந்த மரத்தடியில் நின்று யோசித்தார்.
அப்போதுதான், அவருக்கு தான் துவக்கத்திலிருந்து தொடர்ச்சியாக செய்துவருகிற தவறுகளை உணர்ந்தார்.
அவர் பூமிக்கு வந்தது, எதற்காக? தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிய, தான் எதிலும் நேரடியாக ஈடுபடாமல், தூர நின்று பார்த்து தெரிந்து கொள்ள வந்துவிட்டு, எப்படி தானே இந்த சுழற்சியில் நேரடியாக கழுத்தளவு சிக்கிக்கொண்டோம் என பிரமித்தார்!
இரண்டாவதாக, பூமியில் இருக்கும்போது, எந்தக் காரணத்திற்காகவும் தனது தெய்வீக சக்தியை உபயோகிக்க கூடாது என்று தீர்மானித்துவிட்டு, எடுத்த எடுப்பிலேயே, அதை பயன்படுத்தி, அமைச்சர் நாத்திகனின் பி.ஏ.வின் துரோகத்தை அறிந்து அமைச்சரிடம் தெரிவித்தோம் எனவும் வருந்தினார்.
மூன்றாவதாக, இங்கர்சால் மனதார தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். பூமியில் நடக்கும் தீமைகளின் சுழற்சி வேகத்தில் தானும் சிக்கி, தலைகுப்புற விழுந்துவிட்டோம் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி புரிந்துகொண்டு, அரைகுறையாக வந்த பணியை முடித்துக்கொண்டு, தனது இருப்பிடத்துக்கு திரும்பிவிட முடிவு செய்து, அதை மானசீகமாக ஈசனுக்கும் தெரிவித்துவிட்டார்.
வசந்தா, தனக்குள் சிரித்துக்கொண்டு, தன்னால் இன்னும் எவ்வளவு நாட்கள் தாக்குப் பிடிக்கமுடியும் என்று பார்த்துவிட தீர்மானித்தார்.
சினிமா தயாரிப்பாரின் உதவியாளர், வசந்தாவை அருகிலிருந்த ஒரு கட்டிடத்திற்குள் அழைத்துச் சென்று, ஒரு ஏ.சி. ரூமில் அமர்த்திவிட்டு, அவள் கையில் ஒரு போட்டோ ஆல்பத்தை தந்து அதை பார்த்துக் கொண்டிருக்கச் சொல்லிவிட்டு, உள்ளே போனார்.
வசந்தா, ஆல்பத்தை திறந்து, ஒவ்வொரு போட்டோவாக பார்த்துக் கொண்டிருந்தாள்.