நான் கிளம்பறேன். இன்னொரு நாள் வரேன்" தமிழ்செல்வி கிளம்புவதிலேயே குறியாக இருக்க, "யாரு நீயா? இன்னொரு முறை வருவியா? கையை பிடிச்சு கூட்டிட்டு வந்ததுக்கே வாசலோட ஓடிட பார்த்தவ தான...பாக்கியம், ரெண்டு டீ...அப்பறம் சாயந்தரம் சாப்பிட இன்னைக்கு என்ன பண்ணிருக்கோ அது ஒரு தட்டுல கொண்டு வா" என அவரை அனுப்பிவிட்டு இவளிடம் திரும்பினார்.
"அப்பறம், செல்வி சொல்லு. உன் குடும்பத்துல யாரெல்லாம் இருக்கா?" எங்கே கையை விட்டால் ஓடிவிடுவாளோ என்பதை போல அவளின் கையை பிடித்திருந்தார்.
"என் வீட்ல நான் அம்மா, அப்பறம் ரெண்டு தங்கைங்க மட்டும் தான் பாட்டி. பெரியவ பேரு இலக்கியா, சின்னவ பேரு காவ்யா. அப்பா இல்லை. அம்மா ரிட்டையர்டு டீச்சர். நான் இங்க வேலை செய்துட்டு இருந்தேன். இனி புது வேலை தேடணும். அவ்ளோ தான்" சிறுபுன்னகையுடன் சொன்னாள் தமிழ்செல்வி.
"என்னை பத்தி கேக்கலையே...நானும் என் ரெண்டு பேரனுங்களும் தான் இருக்கோம். என் மக வயித்து பேரங்க. அப்பறம் வேலை ஆளுக. அவ்ளோ தான். ஒருத்தன் படிக்கிறான், எப்போ பாரு போனு இல்லைனா கம்ப்யூட்டர். இன்னொருத்தன் எங்க கம்பெனி எல்லாம் பார்த்துக்கறான். அவன் அடிக்கடி வெளியூர், வெளிநாடுனு போயிடுவான். அதான் பேச்சு துணைக்கு நீ கிடைச்சதும் விடாம பிடிச்சுக்கிட்டேன்" வாஞ்சையாக அவரை பார்த்தாள் தமிழ்செல்வி. விசாலம் ஏதேதோ கேட்க அதற்கெல்லாம் பதில் சொல்லியபடி பேசிக்கொண்டிருந்தாள் செல்வி. இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் கேட்டார் விசாலம்.
"செல்வி நான் ஒன்னு கேட்டா தப்பா நெனைக்கமாட்டியே" என்று விசாலம் கேட்கவும்
"சொல்லுங்க பாட்டி" என்றாள் தமிழ்செல்வி.
"நீ இங்க வேலைக்கு வரியா? உனக்கு எவ்ளோ சம்பளம் வேணுமோ கேட்டுக்கோ" விசாலம் சட்டென கேட்கவும் தமிழ்செல்விக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. "இல்லை பாட்டி ...அது..."அவள் சொல்ல தயங்க, "என்னடா இவங்க நல்லா தான இருக்காங்க அப்பறம் எதுக்கு இவங்களுக்கு கேர் டேக்கர்னு நெனைக்கிறியா?" அவள் சொல்ல தயங்கியதை அவர் சரியாக யூகித்து கேட்டார்.
அவரின் கேள்விக்கு அவள் மௌனம் சாதிக்கவும், "இங்க எனக்கு பேச்சு துணைக்கு யாரும் இல்லை. போனவருஷம் என் வீட்டுக்காரர் தவறிட்டார். அதுல இருந்து ரொம்ப தனிமையா இருக்கு. எவ்ளோ நேரம் தான் அந்த பாழாப்போன சீரியலையே பாக்கறது? என் பேர பசங்களுக்கு என் கூட பேச நேரமில்லை. அது மட்டும் இல்லை. முன்னமாதிரி இல்லை. அப்பப்போ சாப்பிட வேண்டிய மருந்தெல்லாம் மறந்து போயிடுது. அதனால தான் கேக்கறேன்.