படிக்கும் போது யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட்! ஞாபகமிருக்கட்டும்!" தனது சட்டை காலரைத் தூக்கிவிட்டு அவன் கூற, மறுப்பேச்சு பேசாமல் நின்றாள் சிவன்யா. சரிதான்...! அவன் வாழ்வை அவனே கெடுத்துக் கொண்டான். எழுந்த கோபத்தில் அவள் கன்னங்களும், நாசியும் சிவந்துப் போக, சட்டென அவனிடமிருந்து மதிப்பீட்டு சான்றிதழைப் பிடுங்கிக் கொண்டு, அங்கிருந்து நகர முயன்றவளின் சேலை தலைப்பானது அவனது கரத்தினால் சிறைப்பிடிக்கப்பட்டது. அதனை விடுவிக்க தன் பலங்கொண்ட வரையிலும் முயன்றவளின் முயற்சி யாவும் வீணே கழிந்தன. தன்னை விடுக்க கூறவும் விரும்பாதவளாய் கோபத்தின் உச்சத்தில் இருந்தவளை, எதிர்நோக்கா விதமாக தன்னருகே இழுத்தான் அசோக். செய்வதெல்லாம் செய்துவிட்டு சமாதானம் செய்வதால் அனைத்தும் சரியாகிவிடுமா என்ற தொனியிலே இருந்தாள் சிவன்யா.
"அதுமட்டுமில்லாமல், இதோ இந்த மக்கு டீச்சரோட மனதில் இடம் பிடித்ததிலும் நான்தான் ஃபர்ஸ்ட்!" என்றவனாய் அவள் கரத்திலிருந்த சான்றிதழை வாங்கி மேசை மீது வைத்தான் அசோக்.
"அவங்களை இப்படி சீண்டிப் பார்ப்பதிலும் நான்தான் ஃபர்ஸ்ட்! அவங்க நம்பிக்கையை சம்பாதித்ததிலும் நான்தான் ஃபர்ஸ்ட்!" அவன் மொழிகளில் கோபத்தினால் சிவந்த கன்னம், நாணத்தால் சிவக்க தொடங்கியது!
"ஆயிரம் படித்து, பெரியாளா இருந்து என்னப் பயன்? மனைவியோட கோபம் தானே எப்போதும் ஜெயிக்குது!" என்றவன் அவள் முகத்தினை உயர்த்தினான். அவள் கோபத்தித்தை தணித்துவிட்ட ஆனந்தம் அவனுடையது!
"அப்போ யாரு பெஸ்ட்?" கோபம் விலகாதவளாய் வினவினாள் சிவன்யா.
"வேற யாரு நான்தான்!" மீண்டும் தன் வேலையினை அவன் தொடங்க,
"என்னது?" என்பவளாய் அவன் சட்டையினைப் பற்றினாள் அவள். அதனை எதிர்நோக்காதவனாய், தன் விழிகளை உருட்டி விழித்தவன்,
"நீங்க டீச்சர் அப்படிங்கிறதை மணிக்கு ஒருமுறை நிருபிக்கிறீங்க!" என்று சமாதான மொழி பேச, "அது!" என்பதாய் அவனை விடுவித்தாள் அவள். மனைவியிடம் பகைத்துக் கொள்ளலாம் ஒரு ஆசிரியரிடம் பகைத்துக் கொள்ள இயலாதல்லவா!
"அப்பறம் எதாவது ஐடியா இருக்கா?" முடியும் தருவாயில் இருந்த உரையாடலை மீண்டும் எதற்காக அவன் தொடங்கினான் என்ற தாத்பரியம் விளங்காமல் விழித்தாள் சிவன்யா.
"எதாவது என்கிட்ட கேட்கணும்னு தோணுதா?" அவன் கண்களில் எரிந்த ஆயிரமாயிரம் மின்னலைகளினை அவள் கவனிக்கவே இல்லை.