தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 09 - ஜெய்
மைத்தியின் பயிற்சி நல்லொரு நாளில் துவங்கியது.... மைத்தியும், துளசியும்தான் புதியவர்கள்... மற்றவர்கள் ஏற்கனவே அங்கு பயிற்சி மேற்கொண்டிருப்பவர்கள்... அதே போல் மிக சொற்பமான பெண்களே அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்... இவர்களையும் சேர்த்து மொத்தம் ஐந்து பெண்களே இருந்தனர்....
பயிற்சியாளர் அவர்களை அறிமுகப்படுத்தினார்... லக்ஷ்மி, சுகுமாரி, ரமா அந்த பெண்களின் பெயர்கள்... மூவருமே இவர்களை விடப் பெரியவர்கள்... கல்லூரியில் படிப்பவர்கள்.. அதே போல் சற்று வசதியான வீட்டு பிள்ளைகளின் தோற்றமும் அவர்களிடம் இருந்தது... மைத்தியும், துளசியும் சற்று பயத்துடனேயே அவர்களிடம் அறிமுகம் செய்து கொண்டனர்...
பெண்கள் குறைவாக இருந்த காரணத்தால் ஆண்களுடனேயே அவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.... முதல் வாரம் மைத்தியையும், துளசியையும் பீல்டிங் செய்ய பணித்துவிட்டு, மற்றவர்கள் விளையாடுவதை உன்னிப்பாக பார்க்க சொன்னார் பயிற்றுவிப்பாளர்...
அடுத்த வாரத்திலிருந்து மைத்திக்கும், துளசிக்கும் பயிற்சி ஆரம்பித்தது... திறந்த வெளியில் விளையாடியவர்களுக்கு சிறிய, சுற்றிலும் கட்டியிருக்கும் வலைப்பகுதிக்குள் பயிற்சி செய்வது முதலில் வேடிக்கையாக இருந்தது...
முதலில் மைத்தியை பந்து வீச செய்து பார்த்த பயிற்றுவிப்பாளர் அவளின் பந்து வீசும் முறையில் சில திருத்தங்கள் செய்தார்....
அதே போல் துளசியையும் ஆட வைத்து சோதித்து பார்த்தார்... இருவருக்குமே பெரிய டெக்னிக் எல்லாம் தெரியாமல் ஏதோ குருட்டாம் போக்கில் ஆடி வந்தவர்கள்... துளசியின் தந்தை கிரிக்கெட் பிளேயர் என்றாலும் தன் மகளுடன் விளையாடியதில்லை... அதனால் கைக்கு வந்தபடி பந்து போட்டு, மட்டையடித்து ஆடி வந்த இருவரையும் முறைப்படி ஆடப் பழக்குவது சற்று சிரமமாகவே இருந்தது பயிற்றுவிப்பாளருக்கு... அடிப்படை திறமை இருவருக்கும் இருந்ததால் அவரும் சளைக்காமல் தவறுகளை திருத்தி அவர்ளை பயிற்றுவித்தார்....
மாலை பயிற்சி முடித்து வந்தவளை அழைத்து செல்ல ரகு காத்திருந்தான்... துளசியின் தந்தையிடம் விடை பெற்று இருவரும் ரகுவின் சைக்கிளில் கிளம்பினர்...
“மைத்திக்குட்டி ப்ராக்டிஸ் எப்படிடா போறது.... உனக்கு பிடிச்சிருக்கா...”
“போன வாரம் முழுக்க வெறும் பந்துதான் பொறுக்கினோம் ரகுண்ணா... இன்னைக்குத்தான் கோச் பந்து போட அனுமதி கொடுத்தார்... கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது... ரப்பர் பால்ல விளையாடிட்டு இது விளையாடறது வித்யாசமா இருக்கு... லேசா பட்டாலே பட்ட இடம் அப்படி வலிக்கறது....”