தொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன்! - 10 - சாகம்பரி குமார்
சத்யன் சகஜமாக பேசவும் வெள்ளை கொடியை பறக்கவிட்ட ரேச்சல் அந்த மகிழ்ச்சியை ஷீலாவிடம் பகிர்ந்து கொள்ள சென்றாள்.
"மா… எல்லாம் சரியாயிடுச்சு. சத்யன் சார் கூலாயிட்டார்"
"குட்… இனி நீ ஜெமியை வரவேற்கும் வேலையை பார்"
"நாளைக்கு காலையில் ஷாப்பிங் போகலாமா"
"சரிம்மா.. " ஷீலா சிரித்தார்.
ரேச்சலுக்கு அன்று இரவு உறக்கம் வரவில்லை. படுத்தவுடன் உறக்கம் வர அந்த நாள் ஒரு சாதாரணமான நாளாக கடந்திருக்க வேண்டும். அதீத துக்கமோ.. கவலை.. மகிழ்ச்சியோ… உணர்வுகளை கிளறி விட்டு நித்திரை கொள்ள வைக்காது. அன்று மிக மோசமான நாளாக முடியும் என்று நினைத்திருந்தாள்.. அது எப்படியோ மாறிப் போய் விட்டது. அட்லாஸ்ட் அவளுக்கிருந்த ஒரே எதிரியை நண்பனாக்கிக் கொண்டு விட்டாள்.
அவளுடைய மகிழ்ச்சிக்கு அதுதான் காரணமா… அதையும் தாண்டி அடி மனதில் சத்யனின் புன்னகைத்த முகம் ஏதோ உணர்வினை கிளறிக் கொண்டிருந்தது. அவன் பூ தந்த கனவு அன்று வந்தது. இந்த முறை பூவை மட்டும்தான் தந்தான்.
காலையில் எழும்போது உறக்க கலக்கம் இருந்தாலும் உற்சாகமாகவே இருந்தாள். ஷாப்பிங் செல்ல அம்மாவுடன் கிளம்பும் முன் பக்கத்து வீட்டிற்கு சென்று மனு குட்டியுடன் கொஞ்சி விட்டு வந்தாள். ஆனால் அன்று அவள் சத்யனை சந்திக்கவில்லை. அவன் அதற்கு முன்பே அலுவலகம் கிளம்பி சென்று விட்டான். அவளும் அவனை தேடவில்லை. ஒரு இயல்பான மனநிலையோடு அந்த வீட்டிற்குள் அவளால் இருக்க முடிந்தது. அதுவே அவளுக்கு போதும்.
முற்பகலில் ஷீலாம்மாவுடன் காரில் கிளம்பினாள். ஷீலா காரை ஓட்டினாலும் அவள்தான் கூகுள் மேப் பார்த்து வழி சொல்லிக் கொண்டு வந்தாள். ரேச்சலுக்கு ஆடைகள்… வீட்டு அலங்கார பொருட்கள் இவற்றை வாங்குவது ஷீலாவின் திட்டம். அதற்கான சரியான கடைகளை விஜயாவிடம் கேட்டு தெரிந்து வைத்திருந்தார்..
நகரத்திற்குள் நுழையவுமே ரேச்சல்,
"மா...பசிக்குது… செம்மையா என்வி சாப்பிடணும். முதல்ல சாப்பிட்டு விட்டு பிறகு ஷாப்பிங் போகலாம" குழந்தைபோல முகம் சுளித்து கெஞ்சினாள்.
"சரி ரேச்சல். உனக்கு பசிக்குதுனா சாப்பிட்டு விடலாம். இந்த ஊரில் எந்த ரெஸ்டாரண்ட் நல்லா இருக்கும் அப்படின்னு பாக்கணும். இருடா யாரிடமாவது கேட்கிறேன்" என்றுஷீலா சொன்னார்.
அவர் இந்த ஊருக்கு ஓரிருமுறைதான் மருந்து பொருட்கள் வாங்க வந்துள்ளார்.