இரவில் வந்த கனவு நினைவுக்கு வரவும் அந்த மோதிரத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். இப்பொழுது அவளுக்கு அது தேவைதான் என்று நினைத்து அவனை பார்த்து சிரித்தாள்.
மறுநாள் வழக்கம் போல அவள் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்த பொழுது ஜெமி அவளுடன் வந்து சேர்ந்து கொண்டான்.
"ரேச்சல்… எப்படி இருக்க.. உன்னுடைய விபத்துக்கு அப்புறம் உன்கிட்ட டிஸ்டர்பன்ஸ் எதுவும் இருக்கா... முந்திமாதிரி ஈஸியாக பேச மாட்டேங்கறியே' என்று கேட்டான்.
" சும்மா கொஞ்சம் மறதி அப்பப்போ வருது. மத்தபடி ஐம் குட்" என்று சொல்லியபடியே அவனுடன் நடந்தாள்.
அவனுடன் பேசிக் கொண்டே பக்கத்து வீட்டை பார்த்தவள்… அங்கு சத்தியன் பூ பறித்துக் கொண்டு இருப்பதை பார்த்தாள்.
"ஜெமி உன்னிடம் அவரை அறிமுகம் செய்ய வேண்டும். அவர் என்னுடைய பிரண்ட்" என்று அவனை அழைத்துக்கொண்டு சென்றாள்.
"சத்தியன் சார்... குட் மார்னிங் " என்றவள் அவன் திரும்பவும்…
" இதுதான் ஜெமி. என்னுடைய கசின்.. யூஎஸ்ஸில் இருந்து வந்திருக்கிறார். ஜெமி… இவர்தான் சத்யன்" என்று அறிமுகம் செய்தாள்.
சத்யனிடம் கைநீட்டி கைகுலுக்கிக் கொண்ட ஜெமி…
" நான் நீண்ட நாட்கள் கழித்து இந்தியா வந்திருக்கிறேன். அதுவும் இந்த இடத்திற்கு நான் இப்பொழுதுதான் முதன் முறையில் வருகிறேன். உங்களுடைய ஊர் மிகவும் அழகாக இருக்கிறது"
" இது என்னுடைய ஊரும் கிடையாது. நானும் உங்கள் மாதிரிதான் பத்து நாட்களுக்கு முன்பாகதான் இங்க வந்தேன். என்னுடைய தாத்தாவின் வீடு இது" என்று விளக்கினான்.
அப்போது ரஞ்சன் அங்கு வர, ஜெமியை அவனுக்கும் அறிமுகம் செய்து வைத்தாள். அவனிடம் நட்புணர்வோடு கை குலுக்கிய ரஞ்சன் சில வார்த்தைகள் பேசியபின்,
" சத்யன் நாம் தாத்தாவிடம் பேசவேண்டும். வருகிறாயா?" என்று அழைத்தான்.
"இதோ வருகிறேன்' என்று சொன்னவன் திரும்பும்பொழுது அனிச்சையாக ரேச்சலின் கையில் இருந்த புத்தம் புதிய மோதிரத்தை பார்த்தான்.
அந்த மோதிரம் மிகவும் அழகாக இருந்தது. ஒருவேளை ஜெமி தந்திருப்பானோ.. என்று நினைக்கும்போதே… அவனுக்கு ஏதோ ஒரு புதிய உணர்வு தோன்றியது. அவனுடைய இதயம் படபடக்க ஆரம்பித்தது. ஜெமி அவளுடைய அத்தை மகன் என்று சொன்னாளே.