கொண்டிருந்த இருவர் முகத்திலும் புன்னகையை தறுவித்தது.
"ஆள் தான் வளர்ந்து இருக்க, மனசெல்லாம் இன்னும் குழந்தையாகவே இருக்கு உதய்!" என்று அவள் புன்னகைக்க,
"என்னப் பண்றது, எங்கம்மா விவரம் தெரியாமல் வளர்த்துட்டாங்க!" என்றான் அப்பாவியாக மீண்டும்! ஆனந்தமான அந்த உரையாடல், மாயாவின் கவனம் திடீரென அங்கு நின்றிருந்த இராகவனிடம் செல்ல தடையிடைப்பட்டது. அவரைக் கண்டதும், ஆனந்தங் கொண்டவளாய் எழுந்து நின்றாள் மாயா. மாயாவின் இனம்புரியாத அச்செய்கை, உடையானை குழம்ப வைக்க, தானும் எழுந்து நின்றான் அவன்.
"மாமா?" அவள் இதழ் உச்சரித்த அவ்வார்த்தைகள் கேட்டு ஒரு நொடி கூர்ந்து அவளை நோக்கினான் உடையான்! அவளை நோக்கிப் புன்னகைத்தவரின் அருகே சென்றுப் பாதம் பணிந்தாள் அவள். ஆலயம் என்று பாராமல் செய்த அவள் நடவடிக்கைகள் எல்லாம் விளக்கத்திற்கு உட்படுத்தும்படியாகவேஅமைந்தது உடையானுக்கு!
"எப்படி இருக்கம்மா!" என்றவரின் கவனம் ஒரு நொடி தன் மகனை நோக்க, அவனோ குறுகுறுவென அவரையே நோக்கிய வண்ணம் இருந்தான். சற்றே மாயாவை நோக்கி வளைந்தவன்,
"உங்களுக்குத் தெரிந்தவரா?" என்று வினவ, விழிகள் உருட்டி திருதிருவென விழித்தாள் மாயா. தர்மாவுக்கு எப்படியோ, சிறு வயதில் மாயா பார்த்த இராகவனின் முன் பேசுவதற்கும் அவர் அனுமதி வேண்டும்! உடையான் தன் விருப்பத்திற்கு நடந்துக் கொள்வது அவர் மனதில் எதிர்மறையான எண்ணங்களை விதைத்து விடுமோ என்ற அச்சம் அவளுடையது! அவரோ அவன் செய்கையை கூர்மையாக நோக்கியவராய் அவனை இறுகிய முகத்துடன் நோக்கிக் கொண்டிருந்தார்.
"என்ன கேட்ட?" என்று முதன்முறையாய் அவனிடத்தில் வாய் திறவினார் அவர். அதில் அன்பிருந்ததோ, இல்லையோ, இறுக்கமிருந்தது. ஏனோ அவர் குரலின் கம்பீரம் அவனை செயலிழக்கவே வைத்தது. சில நொடிகள் கூர்ந்து அவரை இமைக்காமல் நோக்கியவன் தடுமாறிய குரலில்,
"அண்ணிக்கு நீங்க...தெரிந்தவரா?" மெல்ல மெல்ல உள்ளிறங்கியது அவன் குரல்! எங்கு வீரத்தினைக் காண்பித்தாலும், தந்தையிடத்தில் பணிவென்பது எழுதாத விதி இங்கு சில புதல்வர்களுக்கு!
"அது...அவன்...ஏதோ..தெரி.." மாயா சூழ்நிலையினை சமாளிக்க முனைய, அவளைத் தடுத்தவள், உடையானின் முகத்தினை நேருக்கு நேராய் நோக்கினார்.