என்பதுத் தெளிவாக விளங்கிற்று!
"அண்ணி ப்ளீஸ்! கிளம்பலாம் வாங்க!" அவள் வேதனையோடு இராகவனை நோக்க, எது நிகழ்வினும் பார்த்துக் கொள்ளலாம் என்ற துணிவோடு இருந்தவர் தலையசைத்தார். நிகழ்ந்த எதையும் தடுக்க இயலாதவளாய் மாயா முன்னேற, தன் தந்தையினை திரும்பியும் பார்க்காமல் விலகி நடந்தான் உடையான். செல்பவனை தடுக்க வேண்டும் என்று துடித்த மனதிற்கு வேலி அமைக்க அவர் மறவவில்லை. இத்தனைக் கால இரகசியம் வெளி வருவதால் தான் இழந்த தன் மனைவி, மக்கள் மீண்டும் தன்னுடன் சேர இயலும் என்றால் அது எத்தகு கடுமையானச் சூழல் ஆகினும் எதிர்க்கொள்ள தயாராகத் தான் இருந்தது அவர் மனம்! இறைவன் மேல் சுமை இறக்கி, ஒருவழியாய் மடமை துறந்தார் காவியத் தலைவனும்!
வரும் வழியெல்லாம் மௌனமே வடிவாக வந்தவன், இல்லம் வந்ததும் கூட எவருடனும் எவ்வார்த்தையும் உரையாடாமல் தன்னறை புகுந்தான். அவன் செய்கை விளங்கா தாயும், தமையனும் கேள்வியாக மாயாவினைத் துளைக்க, அச்சத்துடன் இருவரையும் எதிர்க்கொண்டாள் அவளும்!
"என்ன அவன்? நேரா உள்ளே போயிட்டான்? எதாவதுப் பிரச்சனையா?" கேள்விக் கணைகளைத் தொடுத்தான் ஆதித்யா. தர்மாவின் மனதில் இனம்புரியா அச்சம் பரவத் தொடங்கியது.
"கோ...கோவில்ல.." என்றுத் தொடங்கி அனைத்தினையும் அவள் விவரிக்க, தன் ஆசனம் துறந்து அதிர்ச்சியில் எழுந்து நின்றான் ஆதித்யா.
"அப்படி நடக்கும்னு நான் எதிர்ப்பார்க்கவே இல்லை..." அவள் விவரித்துக் கொண்டிருக்க, தர்மாவின் மனதிலான அச்சம், கண்ணீராய் உருவெடுத்தது.
"என்னக் காரியம் செய்தார்? என்னவென்று மெய் உரைப்பது? எவ்வாறுத் தன் புதல்வனிடத்தில் தான் அவன் வளர்ப்புத் தாய் என்ற மெய் புகல்வது என்ற அச்சம் அவரை செயல்படவிடாமல் தடுத்தது.
"ஆதி..?" திக்கற்றவராய் மூத்தவனை அவர் நோக்க,
"நான் பேசுறேன்மா!" என்றுத் தைரியமூட்டினான் அவனும்! மாயாவை நோக்கி அவன் விழியசைக்க, தர்மாவிற்கு ஆறுதலாய் அவர் அருகே சென்று அமர்ந்து அவரை சமாதானம் செய்ய முயன்றாள் மாயா. எங்கிருந்தோ துணிவினைப் பெற்றவனாய், உடையானின் அறை நோக்கி நடந்தான் ஆதித்யா.
அவன் அறைக் கதவுத் தாழிடப்பட்டிருந்தது. இரவு உறங்கும்போதும் அவன் அவ்வாறு செய்ததில்லை. இளையவனுக்குத் தனிமையென்றால் அச்சம்! இன்றுத் தனிமையை நாடியிருக்கிறான். அனைத்தும் எதிர்நோக்கியவைத்தான்!