"கொஞ்சம் வெளியே போயிருக்காரும்மா! வந்துடுவார்"என்றார் தயக்கத்துடன். அவர் கூறியது இருவருக்கும் விளங்காமல் இல்லை.முதன்முறையாய் புதல்வனானவன் தாய் வாழ்ந்த பாவனத்தினைக் காண விழைய, அங்கு அவன் முதல் சந்திப்பே அவன் வெறுப்பிற்குப் பிரியமானவர் முகத்தில் விழிக்க வேண்டாம் என்பதுத் தந்தையின் எண்ணம்! நவீன்குமார் கண்ணசைக்க, அங்கிருந்த ஒரு பணியாளன் அவ்விருவருக்கும் அவர்களின் அறையினைச் சுட்டிக்காட்ட முன்னடக்க அவனைப் பின் தொடர்ந்தனர் இருவரும்! அசோக்கிடமிருந்து ஒரு வார்த்தையும் வெளி வருவதாக இல்லை. மனமெல்லாம் ஓர் எண்ணம் மட்டுமே உலவிக் கொண்டிருந்தது. அவன் தாயினைக் குறித்த எண்ணம்! முதன்முறையாய் எங்குத் திரும்பியும் அவரது இருப்பினை உணர்ந்தான் அசோக்.
"கலெக்ட்ரே, என்னாச்சு?" அவன் வாடிய முகம் கண்டு வினவியவளை, இமைக்கும் நொடியில் இறுகப் பிணைத்துக் கொண்டான் அசோக். மனதின் வேதனைகள், வருத்தங்கள் யாவும் கண்ணீராய் உருமாறி அவளை உறைய வைத்தன. அவன் மன வேதனைகளை அவள் அறிவாள், அனைத்தையுமே அவள் நன்கறிவாள்!அனைத்தையும் கடந்து அவனை இயல்பாக்க மார்க்கம் அந்நொடி அவளுக்கே புலப்படவில்லை.
"ஒண்ணுமில்லைங்க...!" என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே சிறுப் பிள்ளையாய் அழுதுக் கொண்டிருந்தவனிடத்தில் அவளால் அளிக்க இயன்றது. தன்னை மெல்ல ஆசுவாசப்படுத்திக் கொண்டவனின் கண்களைத் துடைத்தவள், வெதும்பிப் போன அவன் கன்னங்களைத் தாங்கினாள்.
"எதுவும் இல்லை...இந்த இடத்துல நிறைய நல்ல நினைவுகள் இருக்கு! அதை மட்டும் பாருங்க...எல்லாம் நல்லப்படியா முடியும் நேரத்துல கசப்பான சம்பவங்களை மறுபடியும் எடுக்க வேணாம்." அவளது ஆறுதல் மொழிகள் அவன் மனதினை மெல்ல மெல்ல நிதானப்படுத்தின.
"பாருங்க கலெக்ட்ரே...! எதுவும் இல்லை...நான்தான் கூடவே இருக்கேன்ல!" என்றவள் புன்னகைக்க, அவனது முகமும் மெல்லியதாய் மலர்ந்தது. அடுத்தவரை ஆனந்தப்படுத்தி காண்பதில் உள்ள சுகம் அலாதியானதல்லவா!
"இந்நேரம் அவர்கள் இல்லம் வந்து சேர்ந்திருப்பர்! ஈன்ற புதல்வன் மருமகளோடு முதன்முறையாய் இல்லம் வந்திருக்க, அவன் தன்னைக் கண்டால் சங்கடம் கொள்வான் என்ற எண்ணத்தில் இங்குத் தனிமையில் அமர்ந்திருக்கும் நிலை எத்தந்தைக்கும் வரலாகாது!" என்றெல்லாம் எண்ணியவரிடமிருந்து கசப்பான புன்னகை வெளிவந்தது. பல ஆண்டுகளுக்கு