முன் அவளை சந்தித்த அதே குளக்கரையில் அமர்ந்திருந்தார் சூர்ய நாராயணன். இங்குத் தான் முதன்முதலாய் தன் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் உடைத்து அவள் தன் மனதினை வெளிப்படுத்தி இருந்தாள். அந்நாள் வாழ்வின் பொன்னாள்! இன்றும் அதனைப் போன்ற நன்னாள் வாழ்வில் ஏற்படவில்லை. அவள் விசித்ரமானவள்! அனைத்து பிரம்மாண்டத்திலும் தர்மாவைப் போன்ற ஒரு பெண்ணை இறைவனால் நிச்சயம் படைக்க இயலாது. ஆண்டாண்டு காலத்திற்கு முன் தோன்றிய காதல், அத்தனை ஆண்டுகள் கழித்தும் அவரை மகிழ்வித்தது.கடந்தக்காலத்தினை எண்ணிய தருவாய் மனதில் மீண்டும் இளங்குமரனாய் உருமாறியதாய் ஓர் எண்ணம் அவருள்! இளமைக்கால காதல் என்றும் பெரியதல்ல, முதுமையிலும் இளமையினை கொணரும் காதல் என்றும் நிரந்தரமானது என்பதில் ஐயமுமல்ல! தன்னையே அறியாமல் புன்னகைத்தவரின் பின்புறம் எவரோ வந்து நிற்பதனை போன்ற உணர்வு மேலோங்க, யாரென்று திரும்பியவரின் விழிகள் ஒரு நொடி விரிந்தன. விரிந்த மறுநொடியே தன்னிலைப்பாட்டிற்கு மீண்டும் வந்தார் நாராயணன்.
"நீ வந்ததுப் போதாதுன்னு உன் புள்ளையும் வந்திருக்கானா?" என்றது பார்வதியின் ஆவேசமானக் குரல். அவரோ எதனையும் மதிக்கவும் இல்லை, சின்னஞ்சிறு கூழாங்கற்களைத் தூர குளத்தில் எறிந்துக் கொண்டிருந்தார் அவர். நீண்ட நேர மௌனம் அவர் பதிலுக்காகக் காத்திருந்தது.
"அவனோட அம்மாவோட ஊரை பார்க்கணும்னு வந்திருக்கான். தடுக்க எனக்கு அதிகாரம் இல்லை!" என்றார் திரும்பாமலே!
"அதான் ஊரோட பெயர், என் குடும்பத்தோட கௌரவம் எல்லாத்தையும் களங்கப்படுத்திட்டு போனாளே! இப்போ என்ன சொந்தம் வேண்டி இருக்கு? என் சாபத்தை வாங்கிட்டு போனவள் நிம்மதியாக வாழ்ந்தாளா?" மனதார அவர் சபிக்க, பொறுமையிழந்தவராய் எழுந்தார் சூர்ய நாராயணன்.
"என்ன? என்ன குடும்ப கௌரவத்தை அவ களங்கப்படுத்தினாள்? எனக்கும், தர்மாவுக்கு முறைப்படி கல்யாணம் ஆகியாச்சு! உங்க சாபம் அவளை வாழ விடலைன்னு நீங்க பார்த்தீங்களா?" என்றவர் பலமாக சிரித்தார்.
"அவ எங்கிருந்தாலும் மகாராணித்தான்! அவ இருக்கிற இடம் அரண்மனைத்தான்! உங்களுக்கு என்னத் தகுதியிருக்கு அவளைப் பற்றி பேச?அன்னிக்கு ஒருநாள் என் பார்வைக்கு நீங்கத் தெரியாமல் என் தர்மா மட்டும் தெரிந்திருந்தால் இந்நேரம் எல்லாமே தலைக்கீழா மாறியிருக்கும்! தெரிந்தோ தெரியாமலோ உங்கச் சாபம் பாதித்தது என்னைத் தான், ஏன்னா, அசோக் அவக்கூட இருந்தான்." என்றவரின் கண்கள் கலங்கின.