தொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன்! - 14 - சாகம்பரி குமார்
மீராவின் வீட்டிற்கு சென்று எந்த விபரமும் கிடைக்காமல் திரும்பிய சத்யனுக்கு டீக்கடை சிறுவன் சொன்ன புதிய விபரங்கள் பல யோசனைகளை கிளப்பின. இந்த விவகாரத்தில் பரத்தும் இருப்பது இப்போதுதான் தெரிகிறது. எனவே அது பற்றி மேலும் விசாரிக்க வேண்டும் என்று தோன்றியது. ரஞ்சனும் அவனும் வரும் வழியில் காரை நிறுத்தி மலைப்பாதையில் வழக்கமான இடத்தில் நிறுத்தி பேச ஆரம்பித்தார்கள். ஏனெனில் வீட்டிற்கு சென்றால் இது பற்றி பேச முடியாது.
"ரஞ்சன் உனக்கு என்ன தோன்றுகிறது?" என்று சத்யன் கேட்டான்.
" இந்த விவகாரத்தை நாம் இவ்வளவு நாள் கவனிக்காமல் விட்டது தவறு என்று தோன்றுகிறது. பாரேன்… முதலில் மீராவுக்கு ஏதோ ஒரு வியாதி என்று ஒரு விவரம் கிடைக்கிறது. பிறகு அது பொய்யான ரிப்போர்ட் என்று தெரிகிறது. இந்த அப்பா மீராவை துரத்திக் கொண்டு தான் மட்டும் போனதாக சொல்கிறார். ஆனால் அவருக்கு பதிலாக பரத்தான் அங்கு சென்றிருக்கிறான். இப்பொழுது மீரா பஸ்ஸில் ஏறினாளா இல்லையா என்பதே குழப்பமாக உள்ளது."
"மீராவோட பேரன்ட்ஸ் ரொம்ப வித்தியாசமா நடந்துக்கிறாங்க. அவளை அவர் சொந்த மகளைப் போல நடத்தவில்லை. எனக்கு பல சந்தேகங்கள் வருது. இந்த பரத் மீராவை
எதற்கு அடிக்கணும்?. கல்யாணத்துக்கு அப்புறம் அவள் நிம்மதியா இருந்து இருந்தாளான்னு எனக்கு புரியவில்லையே"
"ஆமாம் சத்யா.. மீராவின் வாழ்க்கையில் நிறைய ரகசியங்கள் மறைக்கப்பட்டிருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. அவளுடைய இளம்பிராய வாழக்கை... வளர்ந்த விதம் அனைத்தையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்"
"கரெக்ட்.. ஒரே ஒரு ஆள்தான் அதற்கு பதில் சொல்ல முடியும்"
" யாரது?"
" சௌமியா. மீராவின் நெருங்கிய தோழி… அந்த பெண்ணிடம்தானே நான் கலம்காரி புடவை வாங்கினேன். அப்போதுதான் அவள் மீராவை அறிமுகப்படுத்தினாள். அவள் உண்மையிலேயே நல்ல பெண். அவளுக்கு ஏதாவது உண்மை தெரியும். நான் திருமணத்திற்கு பிறகு அவளை சந்திக்கவே இல்லை. அதுதான் சிக்கல். இப்பொழுது நாம் அவளை சந்தித்தாக வேண்டும்.'
"இது நல்ல யோசனை. நாளை காலை முதல் வேலையாக சௌம்யாவை சென்று சந்திப்போம்" ரஞ்சன் தீர்மானித்தான்.
சத்யனை.அழைத்துக் கொண்டு காரில் ஏறினான்.
ஆனாலும் சத்யனுக்கு மனம் அமைதியடையவில்லை. மீரா… உனக்கு என்னம்மா ஆனது…? அவன் பெருமூச்சுவிட… ரஞ்சன் அவனை திரும்பி பார்த்தான். கலங்கி சிவந்திருந்த கண்கள் சத்யனின் ஆழ்மனதின் வேதனையை காட்டி தந்தன.