தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 12 - ஜெய்
அடுத்து இவர்கள் விளையாடப்போவது மாநிலங்கள் இடையிலான போட்டி என்பதால் தேர்வு முறை மிகக் கடினமாக இருக்கும் என்பதை அறிந்த பயிற்சியாளர் இருவருக்கும் மிகக் கடுமையான பயிற்சிகள் அளிக்க ஆரம்பித்தார்.... காலை, மாலை அதுவும் தவிர வார இறுதிகளிலும் இவர்களுக்கு பயிற்சிகள் இருந்தது.... மைத்தியின் விளையாட்டு திறனை அறிந்த அவளின் பள்ளி பள்ளி நேரங்களில் அவளுக்கு சற்று சலுகை அளித்தது... காலையில் சற்று தாமதமாக பள்ளிக்கு வந்து, மாலையில் சற்று முன்னதாக கிளம்பினாள்.... அதனால் ஓரளவு சமாளிக்க முடிந்தது... இல்லையென்றால் மைத்தி திணறிப் போயிருப்பாள்...
மிக மிக நன்றாக படிக்கும் மாணவி என்பதால் படிப்பிலும் கோட்டை விடவில்லை... விடுபட்ட பாடங்களுக்கு அவளின் ஆசிரியர்கள் நோட்ஸ் கொடுத்து உதவினார்கள்.... வீட்டிலும் அவளின் மாமாவின் பிள்ளைகள் உதவ படிப்பில் தொடர்ந்து முதலிடத்திலேயே இருந்தாள்....
ஒரு சனிக்கிழமை மதியம் இவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்ற தபால்காரர் ரகுவிற்கு தபால் வந்திருப்பதாக கூறி கொடுத்துவிட்டு சென்றார்... அதை வாங்கிய காமேஷ் தன் பெரியப்பாவிடம் கொடுக்க அவர் அதை பிரித்து பார்த்தார்....
பிரித்து படித்தவரின் கண்கள் கலங்க ஆரம்பித்தது... என்னவோ ஏதோ என்று பதறிய காமேஷ் சென்று அனைவரையும் அழைத்து வந்தான்....
“என்னாச்சுடா.... லெட்டர்ல என்ன வந்திருக்கு... எதுக்கு கண் கலங்கற....”, சுப்பிரமணியம் தாத்தா பதறியபடியே தன் மகனிடம் கேட்டார்...
“அப்பா நம்ம ரகுக்கு சென்ட்ரல் கவெர்ன்மென்ட்ல வேலை கிடைச்சிருக்கு.... staff selectionல பாஸ் பண்ணிட்டான்... அடுத்து இன்டர்வியூக்கு வர சொல்லி சொல்லிருக்கா... டெல்லில போஸ்டிங்....”, வேணு சொல்ல அனைவரும் ஆனந்தப்பட்டனர்....
“எல்லாம் கற்பகாம்பாளோட அருள்.... இன்னைக்கு சாயந்தரம் கோவிலுக்கு போயிட்டு அர்ச்சனை பண்ணிட்டு வரணும்... அப்படியே முண்டகண்ணியம்மனுக்கு அபிஷேகத்துக்கு கொடுக்கணும்....”, சீதா உடனடியாக வேண்டுதல்களை கூற ஆரம்பித்தாள்....
“ஏண்டா வேணு, நீ போய் ரகுவண்ட சொல்லி கூட்டிண்டு வாயேன்....”
“இங்க இருந்து ஆடிட்டர் ஆம் வரைக்கும் போகணும்மா... அஞ்சு மணிக்கு இன்ஸ்டிடியூட்டுக்கு வந்துடுவான்... அங்க போய் கூட்டிண்டு வரேன்....”
“என்னைக்கு வரணும்ன்னு லெட்டர்ல சொல்லி இருக்காளா.....”
“வர்ற 27-ஆம் தேதி ரிப்போர்ட் பண்ண சொல்லி இருக்கா...”
“இன்னும் மூணு வாரம்தானே இருக்கு... ஏண்டா அங்க தனியா எப்படிடா போய் இருப்பான்... யாரையும் தெரியாதே....”