அருகில் இருந்த ரஞ்சன் கையை இறுக்கமாக பிடித்தான்.
" உடனே இந்த விஷயத்தை நாம் கவனித்தாக வேண்டும்?' என்றான்.
" இரு இரு இன்னும் சில விஷயங்கள் சௌம்யாவிடம் நான் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்காக சற்று பொறு" என்று சொல்லி விட்டு சௌமியாவை பார்த்து ரஞ்சன் பேச ஆரம்பித்தான்.
"சிஸ்டர் நான் இந்த விஷயத்தை ஆராய ஆரம்பித்ததில் இருந்தே எனக்கு ஒரு சந்தேகம் வந்து கொண்டே இருக்கிறது. மீராவின் அம்மாவும் அப்பாவும் அவளுக்கு ஆதரவாக ஆரம்பத்திலிருந்தே இல்லை. மேலும் மீராவை மிகவும் மனக்கவலைக்கு உள்ளாகி இருக்கிறார்கள்" என்று சொல்லிவிட்டு மீராவின் மெடிக்கல் ரிப்போர்ட் பற்றிய விஷயத்தை சுருக்கமாக விளக்கினான்.
" அந்த இடத்தில் ஏன் அவர்கள் பொய் பேச வேண்டும்?. மீராவை சத்யனிடம் இருந்து பிரிக்கும் திட்டத்திற்கு அவர்கள் ஏன் உடந்தையாக இருக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள் "
" அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் அண்ணா. ஏனெனில் மீரா அவர்களுடைய சொந்த பெண் இல்லை. அவர்களுக்கு குழந்தை இல்லை என்று சொந்தத்தில் இருந்து மீராவை தத்தெடுத்து வளர்த்தார்கள். அவளுக்கு சொத்தும் நிறைய இருந்தது. ஆனால் அவர்களுக்கு இன்னொரு குழந்தை பிறந்த பிறகு மீராவின் மீது இருந்த கவனிப்பு அவர்களுடைய அம்மாவிற்கு குறைந்து போய்விட்டது. அவள் சிரமத்துடன்தான் வளர்ந்தாள்." ஒரு பெருமூச்சுடன் தொடர்ந்தாள்.
"மீராவின் மனதில் அவர்கள்தான் அவளுடைய பெற்றோர்கள் என்று எண்ணம் ஆழமாக இருந்தது. அதிலும் அவளுக்கு அம்மாவின் மீது மிகவும் பிரியம். அவர்களுக்கு ஒன்று என்றால் துடித்துப் போவாள். வீட்டிலுள்ள அத்தனை அத்தனை வேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள். விவரம் தெரிந்த பிறகு கூட… அவள் மீது அவர்களுக்கு சிறிதும் அன்பு இல்லை என்று தெரிந்த பிறகும் கூட… மீரா அம்மாவின் அன்பை எதிர்பார்த்து இருந்தாள். அந்த பாசத்திற்காக அவள் ஏங்கிக் கொண்டிருந்தாள் என்பது உண்மைதான். நல்லவேளை உங்களை திருமணம் முடித்த பிறகுதான் அவள் நிம்மதியாக இருப்பதாக சொன்னாள். அவள் எதிர்பார்த்த அன்பும் அரவணைப்பும் அவளுக்கு கிடைத்ததாக சொன்னாள். உங்கள் வீட்டிலுள்ள அனைவரைப் பற்றியும் அவள் எவ்வளவு பெருமையாக பேசுவாள்"
"அது சரி… அவளை பரத் ஏன் அடித்துத் துன்புறுத்த வேண்டும். பரத்தை பார்த்தால் அவள் ஏன் பயப்பட வேண்டும்?. நிறைய நாட்கள் கோவிலில் சென்று அமர்ந்து கொள்வாள் என்று அங்கிருந்த ஒரு சிறுவன் கூட சொன்னான்" என்று ரஞ்சன் கேட்டான்.
"அதே என்னவென்றால் மீரா நீங்கள் நினைப்பது போன்ற அமைதியான பெண் இல்லை. அவள் ஒரு குறும்பான பெண். சேட்டை அதிகம். துறுதுறுவென்று இருப்பாள். கலாட்டா செய்வாள்.