சொல்லத்தான் உங்களை அழைத்தேன்"
"புரிகிறது டாக்டர்… நாங்கள் இனிமேல் ஜாக்கிரதையாக இருக்கிறோம்" என்று சொல்லிவிட்டு ரஞ்சன் சத்யனை அழைத்துக்கொண்டு திரும்பினான். சத்யன் டாக்டரிடம் திரும்பி,
" மீண்டும் ஒருமுறை நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். இனி இதுபோன்ற தவறுகள் நடைபெறாது" என்று சொல்லி விட்டு காரை நோக்கி சென்றான். காரில் ஏறிய பிறகு,
" இப்பொழுது ஒரு விஷயம் நமக்கு நல்லபடியாக முடிந்து விட்டது. நாம் சௌமியாவை பார்த்து பேச வேண்டும். அதற்கு இன்று மதியம் செல்வோம்" என்று சத்யன் சொன்னான்.
அதை ஒப்புக் கொண்டு ரஞ்சனும் அலுவலகம் நோக்கி அமைதியாக ஓட்டிக் கொண்டிருந்தான். சத்யன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் யோசித்துப் பார்க்கும் பொழுது சமீபகாலமாக அவனுடைய வாழ்க்கையில் இந்த விபத்து பற்றிய விஷயமும் அம்னீசியா பற்றிய விஷயமும் திரும்பத்திரும்ப நடக்கிறது. என்ன ஒன்று அந்த ரோலை செய்கிற கேரக்டர் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறது. இது விதியா என்ன?.
முதலில் மீராவுக்கு முடியவில்லை என்றார்கள் பிறகு சத்யனும் கொஞ்சநாள் கோமா நிலையில் இருந்தான். இப்பொழுது ரேச்சலுக்கு அந்த கதாபாத்திரம் தரப்பட்டு விட்டது. இப்பொழுது என்ன செய்வது?. சத்யன் நிலைதான் பரிதாபம் அவனுக்கு ஒரு நல்ல முடிவு வராதா? என்று கவலைபட்டான்.
முதலில் இந்த விசயத்தை நந்தினியிடம் சொல்லவேண்டும். அம்னீசியாவில் இருக்கிற ஒரு பெண்ணை எப்படி மனுவிற்கு அம்மாவாக மாற்ற முடியும்?. நாளைக்கே ரேச்சலுக்கு நினைவு திரும்பலாம்… அப்போது மனுவை மறந்தும் போகலாம்… அதனால் குழந்தை மனதளவில் பாதிக்கப்படலாம். ரேச்சலிடமிருந்து மனுவை விலக்கி வைக்க வேண்டும்.
கொதிக்கும் எண்ணெய்க்கு பயந்து எரியும் நெருப்பில் விழுந்தார்போல ஆகி விடும்… மனுவையும் சத்யனையும் பாதுகாக்க வேண்டியது அவனுடைய பொறுப்பு. இந்த மீரா என்னவானாள் என்று தெரியவில்லை… வாழ்க்கை சிக்கலான நூல்கண்டாகி விட்டது. ஏதாவது ஒரு முனையை கண்டுபிடித்து சிக்கலை பிரிக்க ஆரம்பிக்க வேண்டும். அந்த நுனி… மீரா என்னவானாள் என்று கண்டுபிடிப்பதில்தான் இருக்கிறது.
அன்று மதியமே அவர்கள் இருவரும் சௌமியாவை தேடி சென்றனர். சௌமியா மீராவின் நீண்டகால தோழி என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் மீராவை பற்றிய விவரங்கள் எதுவும் அவளிடம் இருக்கலாம் என்று சத்யன் நம்பினான். ஒருவேளை மீரா இப்பொழுது உயிரோடு இருந்தால்… அவள் இருக்குமிடம் கூட அவளுக்கு தெரிந்து இருக்கலாம் என்று அவன் நம்பினான். எனவேதான் சௌமியாவை தேடி சென்றனர்.