தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 13 - ஜெய்
ரஞ்சிக்கோப்பையில் விளையாட வேண்டும் என்பது பல வீரர்களின் கனவு... இந்திய அணியில் தேர்வாவதற்கான திறவு கோல் என்று கூட கூறலாம்.... எனவே தேர்வு முறை கடுமையானதாகவும், போட்டியுடனும் இருக்கும்.... மைத்தியும், துளசியும் விளையாட ஆரம்பித்த முதல் போட்டியிலிருந்து மிக நன்றாக விளையாடி வந்தததால் தேர்வு பெறுவதில் பெரிய கஷ்டம் ஏற்படவில்லை...
இந்த தேர்வு முறையிலும் அரசியல் இருக்கத்தான் செய்தது... ஆனால் மைத்தி விளையாடும் அகாடமியின் தலைவர் சற்று அதிகார பலமுள்ளவராக இருந்ததால் மற்றவர்களின் அரசியலில் இருந்து மைத்தியும், துளசியும் தப்பினார்கள்....
மைத்தி வீட்டில் மைத்தியின் தந்தை தவிர அவளின் மாமாக்களுக்கு பெரிதாக இந்த விளையாட்டில் விருப்பம் இல்லை... எனவே அவர்கள் அதை பற்றி பெரிதாக தெரிந்து கொள்ளாமல் இருந்தார்கள்... அவர்களே அப்படி எனும்போது அவளின் தாத்தா, பாட்டி பற்றி சொல்லவே தேவையில்லை...
அவர்கள் நினைத்திருந்தது மைத்தி ஏதோ சிறு, சிறு விளையாட்டுக்கள் விளையாடி வருகிறாள் என்றே... இதுவரை நடந்த அனைத்து போட்டிகளுக்கும் ரகு அல்லது அவளின் தந்தையே அழைத்து சென்றிருந்தனர்... இவர்களால் முடியாத போது கண்ணன் வந்து அழைத்து செல்வார்... மற்ற குடும்ப உறுப்பினர்கள் இதுவரை மைத்தி விளையாடி பார்த்ததில்லை... அதுவும் கற்பகம் பாட்டி, என்று மைத்திக்கு இந்த கிரிக்கெட் பித்து ஒழிந்து மற்ற பேத்திகள் போல் மாறுவாள் என்று காத்துக் கொண்டிருக்கிறார்....
மாவட்ட அளவில் மைத்தி போட்டிகளில் கலந்து கொண்டிருந்தாலும் பெரும்பான்மையான போட்டிகள் சென்னையிலேயே நடைபெற்றது... வெளியில் நடந்த போட்டிகளும் செங்கல்பட்டும், காஞ்சீவரமும்..... இரு போட்டிகளுக்கும் அதி காலையில் சென்று இரவில் திரும்பி விட்டார்கள்.... எனவே முதன் முறை சென்னை அல்லாது பிற இடங்களும் இருக்கலாம் என்ற அனுமானத்தில் கூறியபோதே கற்பகம் பாட்டி இந்த போட்டியே வேண்டாம் என்று அறிவித்துவிட்டார்...
விளையாடுவதற்கு ஆண்களையே வெளியூருக்கு அனுப்புவதற்கு தயங்கிய காலகட்டம்... படிப்பு, வேலை என்று வரும்போது ஒத்துக்கொள்ளும் குடும்பங்கள் கூட விளையாட்டு என்று வந்துவிட்டால் மறுத்துவிடும் நிலை... ஆண்களுக்கே இந்த நிலை எனும்போது சிறு பெண்ணான மைத்திக்கு எப்படி சம்மதம் கிடைக்கும்....
பயிற்சி முடிந்து வீட்டிற்குள் நுழைந்த மைத்தி தன் தாயிடம் ரஞ்சிக்கோப்பை நடைபெறும் இடங்களையும், தேதிகளையும் குறிப்பிட்ட காகிதத்தை கொடுத்துவிட்டு, அதில் தமிழக அணி