தாத்தாக்கிட்ட ஆசீர்வாதம் வாங்கிண்டு வந்துடு....”, காமாட்சி பாட்டி சொல்ல, அனந்து கண்ணனை பார்க்க கிளம்பினார்... மைத்தியும், ஷியாமளாவும் கீழே சென்றனர்...
“ஏண்டி மைத்தி உன்னைத்தானே வர சொன்னேன்... அம்மாவையும் சேர்த்து இழுத்துண்டு வந்திருக்கே...”, கற்பகம் பாட்டி கடிய, மைத்தி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்...
“உடனே மூஞ்சியைத் திருப்பிக்கோ... ஏற்கனவே காலம்பறலேர்ந்து பள்ளிக்கூடத்துல நின்னுண்டே கிளாஸ் எடுக்கறா... அதுவே வலிக்கும் பாவம்... இதுல நீ வேற அவளை மேலுக்கும், கீழுக்கும் நடக்க விடறயேன்னு சொன்னேன்.... உடனே கோவம் வந்தாச்சு....”
“விடும்மா நான்தான் உங்களண்ட ஒரு விஷயம் சொல்லணும்ன்னு வந்தேன்... அண்ணாலாம் எங்க...”
“வர்ற நேரம்தான்...”, அந்த நேரம் மித்தத்திற்கு தண்ணீர் பிடிக்க மைத்தியின் இரண்டாம் மாமாவின் பெண் கல்யாணி வர, அவளை அனுப்பி மற்றவர்களை அழைத்து வர சொன்னாள் ஷியாமளா... அனைவரும் வர சியாமளா மைத்தி ரஞ்சிக்கோப்பை விளையாட முதலில் பஞ்சாப் செல்ல வேண்டும் என்றும், மற்ற போட்டிகளுக்கு மேலும் பல மாநிலங்களுக்கும் போக வேண்டி இருக்கும் என்றும் கூறினாள்....
“வேற மாநிலத்துக்கா... அதெல்லாம் வேண்டாம்... இந்த போட்டில மைத்தி விளையாட மாட்டான்னு மாப்பிள்ளையை விட்டு சொல்ல சொல்லிடு... ஏற்கனவே நான் உன்னண்ட சொல்லி இருந்தேனே...”, கற்பகம் பாட்டி தீர்மானமாக சொல்ல மைத்தியின் கண்கள் கலங்க ஆரம்பித்தது...
“பாட்டி இது எத்தனை பெரிய வாய்ப்பு தெரியுமா.... நீங்க என்ன நாங்க பீச்சுல விளையாடற ஆட்டம் மாதிரி நினைச்சுண்டு சடார்ன்னு வர மாட்டான்னு சொல்ல சொல்றேள்....”
“எத்தனாம் பெரிய ஆட்டமா இதுந்தாத்தான் என்னடா பத்ரி.... பொம்மனாட்டி பொண்ணை அப்படிலாம் எங்கயும் அனுப்ப முடியாது...மொதல்ல அவ விளையாட ஆரம்பிக்கும்போதே இந்த மாதிரி எல்லாம் வரும்ன்னுதான் நானும், உங்க தாத்தாவும் இதெல்லாம் வேண்டாம்ன்னு தலப்பாடா அடிச்சுண்டோம்... நீங்க எல்லாருமா சேர்ந்து பேசி எங்களை சம்மதிக்க வச்சேள்... சரி ஏதோ குழந்தை ஆசைப்படறது... கொஞ்ச நாள் விளையாடட்டும்ன்னுதான் நாங்க ஒத்துண்டோம்... இப்போ என்னடானா வேற மாநிலத்துக்கு போறேன்னு ஆரம்பிக்கறா...”
“நீங்க இப்போ மைத்தியை என்னன்னு நினைச்சுண்டு இருக்கேள் பாட்டி... எங்களோட தோட்டத்துல விளையாடற பொண்ணுன்னா.... அவ விளையாடப்போறது தமிழ்நாடு அணிக்காக... இது எத்தனை பெருமையான விஷயம் தெரியுமா... தமிழ்நாட்டுல இருக்கற எத்தனையோ விளையாட்டு வீரர்கள் கனவு இது தன்னோட மாநிலத்துக்காக, நாட்டுக்காக