"நீ நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லை. இதுவரைக்கும் டேட்டிங் கூட போனதில்லை." என்று குழப்பினான் அதர்வ்.
"என்னத்தான்டா சொல்ல வர?" புரியாமல் கேட்டே விட்டார் அவர்.
"ஃப்ரண்ட்ஸ் கூட பார்டிக்குப் போவேன்...நல்லா குடித்துவிட்டு வந்துடுவேன் அவ்வளவுத்தான்!" என்ற விடையில் தன்னைத் தானே நொந்துக் கொண்டார் அவர். இரு புதல்வர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம் என்பதனைத் தெளிவாக உணர்ந்துக் கொண்டார் அவர்.
"அப்போ சிவன்யாக்கிட்ட ஏன் தப்பா பேசுன?" என்று சற்றே கடுமையாக அவர் வினவ, அவனோ சில நொடிகள் மௌனியானான்.
"சிவன்யாவுடைய அப்பாவை பழிவாங்கத்தான் அப்படி பண்ணேன்!" என்று உண்மைநிலை உரைக்கத் திடுக்கிட்டுப் போனார் தந்தையானாவர்.
"அவர் ஒருநாள் எக்ஸாம்க்கு ஸூப்ரவைசரா வந்தார். நாங்க சும்மா இல்லாமல் பிட் அடித்து மாட்டிக்கிட்டோம். அதற்கு அவர் எங்களை எக்ஸாம் எழுதவிடாமல் பண்ணி அனுப்பிவிட்டார். அதற்காகத் தான் அப்படி பண்ணேன். மற்றப்படி தப்பான எண்ணம் எல்லாம் இல்லை. எனக்குப் பொண்ணுங்களையே பிடிக்காது!" என்றான் சற்றே வெறுப்பாக!
"என்னது அவர் உன் காலேஜில வொர்க் பண்றாரா?" என்றார் நம்ப இயலாமல்!
"ஆமா! அவர் தமிழ் டிபார்ட்மண்ட்! உன் புள்ளையை யாரு அவருடைய பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க சொன்னா? என்னமோ என் மேலே தப்பு இருக்குற மாதிரி பார்க்கிறீங்க?" பொரிந்துத் தள்ளினான் அதர்வ்.
"ஓ..சார் பண்ணதுத் தப்பில்லை அப்போ! உனக்கு எல்லாம் பெண் குழந்தைப் பிறந்தா தெரியும்டா!"என்று வாயாற வாகை சூட்டினார் சூர்ய நாராயணன்.
"ஆமா! நான் இருக்குற நிலைமைக்கு எனக்குக் குடும்பம் மட்டுந்தான் குறை!" என்று அப்பேச்சுக்கு முட்டுக் கட்டை இட்டவனாய் முன்னேறி நடந்தான் அதர்வ்.
"ஐயா! சொந்த வீட்டுக்குள்ளே இப்படி மறுவேடத்துல போகனுங்களா?" என்ற அந்த நடுத்தர வயது பால்காரரின் வார்த்தைகளை செவிமடுத்துக் கேட்கவும் தயாராக இல்லை அசோக். அழுக்கேறிய வேட்டி சட்டையும், கலைந்த கேசமும், முகத்தில் ஆங்காங்கே ஒட்டிய சகதியும்...நிச்சயம் அவன் ஆட்சியராய் இருக்க வாய்ப்பே இல்லை என்று கூறிவிடுவர் காண்போர் யாவரும்! தனது பாட்டியாரின் மனநிலையினை ஊகிக்கவே இம்முயற்சியினை மேற்கொண்டிருந்தான் அவன்.
"இங்கே பாருங்க..பேசுன மாதிரி நான் உங்க தூரத்து சொந்தக்கார பையன், படிப்பு ஏறலைன்னு எங்கம்மா மாடு மேய்க்க உங்கக்கிட்ட அனுப்பிட்டாங்க புரியுதா?" திட்டத்தினைத் தெளிவாக வகுத்துக் கொடுத்தான் அவன். இந்நேரம் சிவன்யா அவனுடன் இருந்திருந்தால்...அனைத்தும்