அமோகமாக நிகழ்ந்தேறியிருக்கும். பாவம் அந்த அப்பாவி பால்காரர்..அழுது புலம்பாத குறையாக இத்திட்டத்தினைக் கைவிட வேண்டினார் அவர். அவனோ நான் மாடு மேய்த்தே தீருவேன் என்று பிடிவாதமாய் நின்றிருந்நான்.
"என்ன ஆகப் போகுதோ!" என்றவண்ணம் தயங்கியப்படி உள்ளே நுழைய, வெளியே அமர்ந்தவண்ணம் செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்த பார்வதியின் பிம்பம் அவரை திகிலுற வைத்தது. பாட்டியாரின் பிம்பத்தினைக் கண்டவுடன் உறைந்துப் போய் நின்றான் அசோக். அன்று ஆலயத்தில் பார்த்தவரே பாட்டியாக அமர்ந்திருப்பார் என்று அவன் சொப்பனம் காணாததால் இத்தடுமாற்றம்!
"போயிடலாம் தம்பி!" அச்சத்துடன் அவனிடத்தில் அவர் முனுமுனுக்க,
"என்ன மாணிக்கம் அண்ணே! தம்பி யாரு புதுசா?" என்று அருகே அமர்ந்து நெல் புடைத்துக் கொண்டிருந்த ஒரு பெண் குரல் கொடுக்க, உயிரே போய்விட்டது அவருக்கு! பார்வதி செய்தித்தாளிலிருந்துத் தனது கவனத்தினை எடுத்துவிட்டு மாணிக்கத்தினை நோக்க, திரும்பி நின்று அந்தப் பெண்மணியை கவனித்துக் கொண்டிருந்த அசோக்கின் முகம் அவருக்குப் புலப்படவில்லை.
"மாணிக்கம்! யாருடா அது புதுசா?" என்ற கம்பீர குரலில் ஒரு நொடி அவனே அதிர்ந்துப் போனான். தாயார் நிச்சயம் பாட்டனாரின் சாயலாக இருக்க வாய்ப்புண்டு என்ற எண்ணம் அவன் மனதில் உதித்தது.
"அது...ம்மா..! என்ற அக்காப் புள்ள! டவுன்ல இருந்தான். அக்கா எம்புட்டோ பள்ளிக்கூடம் அனுப்பிப் பார்த்தாங்க! கழுதை ஆணா, ஆவணா கூட மண்டையில ஏறலை இவனுக்கு! படிச்சது போதும் மாடு மேய்க்கவாது போயிட்டு வான்னூ அனுப்பி விட்டுட்டாங்க!" கூறியதற்கு மேலாகவே தத்ரூபமாக பேசினார் அவர். அவனோ இதையெல்லாம் யாரேனும் கேட்டால் என் மரியாதை ஏதாவது என்றப்படி திரும்பாமலே நின்றிருந்தான்.
"மாடு மேய்க்க கூட திறமை வேணுமே! திறமைசாலியா?" என்று அவர் கேட்க, பதில் தெரியாதவராய் அவனையே உசுப்பிவிட்டார் அந்தப் பால்காரர்.
"ஆ..! அதெல்லாம் என்ற அம்மா என்னை இம்புட்டு வருசமா வச்சி மேய்ச்சதை பார்த்திருக்கேனுங்க.." அதே கிராமத்து நடையில் பேசினான் அசோக். ஏனோ அவன் பதில் அவரிடத்தில் சிரிப்பினைப் பொங்கிடவே வைத்தது.
"நல்லாத் தான் பேசுறான். ஏன்..? துரை..திரும்ப மாட்டாரா?" அவன் முகம் காண ஆர்வம் கொண்டவராய் கேட்டவரைக் காண மனம் பதைத்தது அவனுக்கு! தான் யாரென்ற உண்மை அவருக்குத் தெரிய கூடாது என்ற வேண்டுதலோடு திரும்பினான் அசோக். காண விழைந்த முகத்தினைக் கண்டவர் எந்தயொரு சலனத்தினையுமே வெளிக் கொணரவில்லை. நெடுந்நேரமாக