தொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன்! - 17 - சாகம்பரி குமார்
இரவின் இருளை ஜன்னல் வழியே பார்த்தபடி அம்மாவின் அருகில் ரேச்சல் படுத்திருந்தாள். அவளை கூர்ந்து நோக்கிய ஷீலா,
"என்னடா… தூக்கம் வரலையா?. உங்கிட்ட நான் கடுமையாக நடந்துக்கறேனா?" என்று கேட்டார்.
"கண்டிப்பா இல்லம்மா. நீங்க எனக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கீங்க. நீங்க சொல்றதை நான் கண்டிப்பா செய்வேன். எனக்கு வருத்தமில்லை. ஆனா நீங்க வருத்தப்படுகிற மாதிரி நடந்துகிட்டேன். அதுதான் கவலையா இருக்கு" என்றாள்
"அப்படி எல்லாம் இல்லை ரேச்சல். எனக்கு உன் விஷயத்தில் கவலை எதுவும் இல்லை. நான் வருத்தப்படுகிற மாதிரியும் நீ நடந்து கொள்ளவில்லை. அது ஏதோ ஒரு மோசமான நேரம். அவ்வளவுதான்... நீ எடியை பற்றிய கவலையில் இருந்ததால் அப்படி நடந்து இருக்கும் என்று நான் நினைத்தேன். நீ எப்பவும் எனக்கு பிரியமானவள்தான்"
"எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும். என்னுடைய எல்லா கஷ்டத்துலயும் நீங்க என்கூடவே இருந்து இருக்கீங்க. எனக்கு இந்த உலகத்துல யாரையும் தெரியாத போது நீங்க என்னை அன்பும் அரவணைப்பும் கொண்டு பார்த்துவிட்டீர்கள். நீங்க என்னை ஆஸ்பத்திரில கவனிச்சுக்கிட்டதில் இருந்து நீங்க ரொம்ப அன்பானவங்கனு புரிஞ்சுகிட்டேன். அதனாலதான் நான் அவ்ளோ பெரிய விபத்தில் இருந்து தப்பிச்சு உயிரோட இருக்கேன்னும் தோணுது"
"என்னை விட மேத்யூஸுக்கு உன் மேல ரொம்ப பிரியம் ஜாஸ்தி தெரியுமா."
" எனக்கு அவரையும் நினைவில் இல்லை. இப்ப நீங்க இந்த போட்டோவை காட்டி இதுதான் உன் அப்பா அப்படின்னு சொன்னதுதான் நினைவிருக்கு. ஆனால் நீங்க என்னுடைய அம்மாங்கறது மனசு முழுக்க இருக்கு."
ரேச்சல் ஷீலாவை இறுக கட்டிக்கொண்டு முத்தமிட்டாள். "ஐ லவ் யூ மா"
ரேச்சலின் அன்பினால் திகைத்த ஷீலா வாய்விட்டு அந்த வார்த்தைகளை சொல்லி விட்டார்.
"லவ் யூ டியர். எவ்வளவு அன்பானவளாக இருக்கிறாய். எனக்கென்று ஒரு மகள் பிறந்திருந்தால்கூட இவ்வளவு பிரியம் இருக்குமா என்றுஸதெரியவில்லை"
அதைக்கேட்ட ரேச்சல் அதிர்ச்சி அடைந்தாள்.
'அம்மா நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?. நான் உங்களுடைய சொந்த மகள் இல்லையா" என்று கேட்டாள்.
சுதாரித்த ஷீலா… ' அடடா இப்பொழுது இவளிடம் எதையும் சொல்லியிருக்கக் கூடாதோ' என்று நினைத்தார். ஆனாலும் அவளுக்கு தெரிந்து விட்டது… இனிமேல் அதற்கு விளக்கம் தந்தே ஆகவேண்டும் என்று நினைத்து ரேச்சலிடம் பேச ஆரம்பித்தார்.
"ஆமாம்… டியர். நான் இந்த உண்மையை உன்னிடம் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்துடுச்சு.