"அது… அப்புறம் எந்த தொடர்புமே இல்லாமல் போயிடுச்சு. என்ன ஆனாங்கனு தெரியலை"
"நாம மதுரைக்கு அருகில்தான் இருக்கோம். டைம் கிடைச்சா மதுரைக்குபோய் ஃபெலிக்ஸுன்னு டாக்டர் இருக்காரானு தேடி பார்க்கலாமா?"
"அதை எங்க கல்யாணம் முடிஞ்ச பிறகு மேத்யூஸ் செஞ்சாரு… ஆனால் கண்டுபிடிக்க முடியலை. ஏன்னா… அவங்க அங்கே இல்லை… மோர் ஓவர்… ஃபெலிக்ஸ் தன்னுடைய பெயரை இந்து பெயராக மாத்திட்டதால தேட முடியவில்லை."
"அப்பாவுக்கு தம்பியை பிடிக்காமல் போயிருக்குமோ"
"ஆமாம்… அவன் என்னை ஏமாத்திட்டான். என்று எப்போதும் புலம்புவார். தம்பிமீது பிரியம் இருந்தது… வெறுப்பும் இருந்தது. உண்மையில் ஃபெலிக்ஸ் பிரச்சினையால்தான் என்னை விட்டு விலகும்படியானது என்றும் சொல்லுவார்…. ஓகே ரேச்சல் கடவுள்க்கு விருப்பம் இருந்தால் நாம் உன் சித்தப்பாவை சந்திப்போம். இப்போது உறங்கலாமா?" என்று கேட்டு விளக்கை அமர்த்தினார்.
மறுநாள்… விடியலிலேயே சத்யனுக்கு விழிப்பு வந்து விட்டது. இருள் விலகாத அந்த காலை நேரத்தில கேட்ட குயில்களில் குரலிசை… நேற்றிரவு ரேச்சல் பாடிய பாடலை நினைவூட்டியது.
ஆமாம்… உண்மையில் அந்த பாடலை மனுவிற்காக பாடினாளா இல்லை…. அவனுக்காக பாடினாளா…? என்று ஒரு கேள்வி தோன்றி அவனை குழப்ப ஆரம்பித்தது.
உன்னை சேரும்வரை உன் காலடிகளை பின்பற்றி நடந்து கொண்டே இருப்பேன்….
'வாட் நான்சென்ஸ்' என்று.சொல்லிக் கொண்டே எழுந்தான்.
அப்போது அவனுடைய அலைபேசி ஒலித்தது. சௌம்யாதான்…. என்ன விஷயமாக இருக்கும் என்று யோசித்தவனாக அலைபேசியை ஆன் செய்தான்.
"அண்ணா… நான் சௌம்யா பேசுகிறேன்…"
"சொல்லும்மா"
"எனக்கு ஒரு செய்தி கிடைத்தது. அதை உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்."
"என்ன விஷயம்?"
"அண்ணா…. நாம் நினைத்ததுபோல மீராவிற்கு சுயநினைவு இல்லாமல் போகவில்லை… அவளுக்கு எப்போதுமே அம்னீசியா இருந்ததில்லையாம். அவளுடைய பக்கத்து வீட்டு சிறுமியிடம் நன்றாக பேசுவாளாம். அவளுடைய அம்மா என்னிடம் சொன்னார்கள்…. அவள் சுயநினைவோடுதான் இருந்தாளாம்… ஆனால் வெளியில் அனைத்தையும் மறந்தவள்போல நடித்துக் கொண்டிருந்தாளாம்"
"மை காட்…. ஏன் அப்படி செய்தாளாம்…. "