நீ என்னுடைய சொந்த மகள் இல்லை. உங்க அப்பாவுக்கும் எஸ்தருக்கும் பிறந்தவள்."
"நீங்க அப்பாவோட ரெண்டாம் மனைவியா… எனக்கு சித்தி… மை காட்… எப்படிம்மா உங்களால எங்கிட்ட இவ்வளவு பாசமா நடந்துக்க முடியுது."
"கதைகளில் வர்றதை படிச்சிட்டு பேசறியாக்கும். சித்தி என்றால் கொடுமை செய்வாங்கனு நினைச்சிட்ட… உண்மையில் நான் உன்னுடைய அன்பிற்காக ஏங்கிக் கொண்டு இருந்தேன்…. நீ இப்போதுதான் என்னிடம் பிரியமாக பழகுகிறாய். முன்பெல்லாம் என் அருகில்கூட வர மாட்டாய்"
"நானா .. ம்ஹும்… அப்படி இருந்திருக்க மாட்டேன். உங்களை யாராச்சும் வெறுக்க முடியுமா என்ன?"
"அது அப்படித்தான் ரேச்சல்… நான் யாரிடம் அன்பை எதிர்பார்க்கிறேனோ அவங்களுக்கு என்னை பிடிக்காமல் போய் விடும்."
"அம்மா… நான் உங்களை ஹர்ட் செய்திருந்தால் மன்னிச்சுக்கோங்கம்மா…"
"நோ… நோ… இதுல எதுவும் உன் தப்பும் இல்லை. உங்க பாட்டிக்கு என்னை பிடிக்காமல் போயிடுச்சு. எஸ்தரோட இடத்திற்காக காத்திருந்தேன்னு நினைச்சிட்டாங்க. அதனால் உன்னை என்னிடம் நெருங்க விடவில்லை."
"ஏன் அப்படி நினைக்கனும்?. அவங்க விருப்பம் இல்லாமல் அப்பா உங்களை கல்யாணம் செய்துட்டாங்களா?"
"அது ஏன்னா… அதுக்கு உங்க சித்தப்பா ஃபெலிக்ஸும் காரணம்" என்று ஆரம்பித்த ஷீலா தன் கதையை சொல்ல ஆரம்பித்தார்.
முப்பது வருடங்களுக்கு முன் நாகர்கோவிலில் ஆரம்பித்த கதை அது. மேத்யூஸும் ஃபெலிக்ஸும் சகோதரர்கள். நாகர்கோவிலில் பெரிய பணக்கார குடும்பம் அவர்களுடையது…
மேத்யூஸ் விலங்கியல் படித்து விரிவுரையாளராக வேலைக்கு சேர்ந்தபோது ஃபெலிக்ஸ் மெடிக்கல் காலேஜில் படித்துக் கொண்டிருந்தான்.
ஃபெலிக்ஸ் உடன் படித்த தோழிதான் ஷீலா. ஷீலாவிற்கு மற்றுமொரு தோழியும் உண்டு. அவளுடைய பெயர் வசுமதி. அவளும் அவர்களுடன் மருத்துவம் படித்து கொண்டிருந்தாள். மூவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தனர். அந்த சமயத்தில் ஷீலா மேத்யூஸ் வீட்டிற்கு அறிமுகமானவளாக இருந்தாள். ஒரே மதம் என்பதால் அவளை அந்த வீட்டு பெண்ணாகவே அங்கீகரித்திருந்தனர். கிறிஸ்துமஸ்… வருட பிறப்பு… ஈஸ்டர் போன்று எந்த விசேஷம் வந்தாலும் அவளை அழைப்பார்கள். ஆனால் வசுமதி அங்கு வர மாட்டாள்.
ஷீலாவிற்கு மேத்யூஸிடம் நல்ல பேச்சு வார்த்தை இருந்தது. மேத்யூஸ் நல்ல அறிவாளி…