துவண்டு போனார்கள்.... ஏழு மணிக்கு அனைவரையும் பார்ப்பதாக பயிற்சியாளர் சொல்லி சென்றார்.....
“என்ன மைத்திக்கா இப்படி ஆகிடுச்சு.... கஷ்டப்பட்டாவது வின் பண்ணி இருக்கலாம்.... இப்படி சுலபமா தோத்து போய்ட்டோமே....”
“ஆமாம் துளசி, வேணும்ன்னே விளையாடினா மாதிரி இருந்தது.... நீ ஆடும் போது அந்த அக்கா ரன் எடுக்க ஓடியே வரலை... அதே மாதிரி நான் பௌலிங் போடும்போது ரெண்டு ஈஸி கேட்ச்... வேணும்ன்னே பிடிக்காம விட்டுட்டா..... இதெல்லாம் பார்த்தா நம்மளை ஒதுக்கறா மாதிரி இருக்கு....”
“ஆனா பார்க்கறவங்களுக்கு அது தெரியாதே.... ஏதோ நான் ரன் எடுக்காத மாதிரியும், நீ விக்கெட் எடுக்காத மாதிரியும்தானே தெரியும்.....”
“நேக்கு மனசே சரியில்லை துளசி... ரகுண்ணாக்கிட்ட பேசணும் போல இருக்கு.... நீ வர்றியா.... நாம பேசிட்டு வரலாம்....”
“ரகுண்ணா ஆபீஸ்ல இருப்பாரா... மணி அஞ்சாயிடுச்சே... “
“பண்ணி பார்க்கலாம்..... இருந்தா அதிர்ஷ்டம்....”
“டெல்லிலதானே மேட்ச் நடக்குது... ரகுண்ணா வந்திருக்கலாம்...”
“அண்ணாக்கு இன்னைக்கு முக்கிய மீட்டிங் இருக்குன்னு சொன்னா... அதுவும் இல்லாம இப்போதானே வேலைக்கு சேர்ந்திருக்கா.... உடனே லீவ் எடுக்கறதும் கஷ்டம் இல்லை....”, இருவரும் பேசியபடியே மெயின் அலுவலகத்திற்கு சென்று ரகுவிற்கு அழைத்தார்கள்.... ஐந்து நிமிடங்களுக்கு பின் ரகு அழைப்பில் வந்தான்...
“சொல்லுடா குட்டி... எப்படி விளையாடின.... மேட்ச் ரிசல்ட் என்னாச்சு... வின் பண்ணிட்டேளா....”
“ப்ச் ஒரே சொதப்பல் ரகுண்ணா... நாங்க தோத்துட்டோம் ....”
“ஓ பரவாயில்லைடா குட்டி... இதுவும் ஒரு அனுபவம்தானே.... டெல்லி ப்ளேயர்ஸ் எல்லாருமே பயங்கர எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவா.... அவாக்கூட விளையாடினதே பெரிசு....”
“ப்ச் போ ரகுண்ணா.... நாங்க விளையாடற மொதல் பெரிய மேட்ச்.... இதுல தோத்து போனது எனக்கும், துளசிக்கும் அத்தனை வருத்தமா இருக்கு...”
“ரெண்டு பேரும் கவலைப்படறதை நிருந்துங்கோ.... இந்த முறை போனா என்ன.... கஜினி முகமது மாதிரி விடாம போராடு... கண்டிப்பா அடுத்த முறை வெற்றி கிடைக்கும்...”
“இல்லை ரகுண்ணா நாங்க தோத்த கஜினி மாதிரி இருக்கறதை விட 17 வாட்டி அவரை தோக்கடிச்சாளே அந்த ராஜபுத்திர அரசர்கள் மாதிரி இருக்க ஆசைப்படறோம்... விளையாடற எல்லா போட்டிலயும் ஜெயக்கணும்.....”
“நல்ல ஆசைதான் மைத்திம்மா... ஆனா வெற்றி மட்டுமே வாழ்க்கை முழுக்க கிடைக்காது...