சில சமயங்கள்ல தோல்வியும் வரும்..... அதையும் நல்லவிதமா கடக்க நாம பழகணும்.... கவாஸ்கர் எத்தனை பெரிய பேட்ஸ்மேன்.... அவர் டக்கடிச்ச மேட்ச்சும் உண்டு... அதுக்காக அதையே நெனச்சுண்டு உக்கார்ந்தார்ன்னா எப்படி அடுத்த மேட்ச் நன்னா ஆடுவார்....”
“நல்ல உதாரணம் ரகுண்ணா.... ஆனா இங்க எங்களுக்கு அடுத்த மேட்ச் இருக்குமான்னே தெரியலை...”, மைத்தி சொல்ல ரகு திடுக்கிட்டு போனான்...
“என்ன சொல்ற மைத்தி.... இப்போதான் ரெண்டு மேட்ச் முடிஞ்சிருக்கு.... அதுக்குள்ள அடுத்த மேட்ச் இருக்குமான்னு சொல்ற.... கான்செல் ஆகும்ன்னு ஏதானும் சொன்னாளா.... அடுத்த மேட்ச் உங்களுக்கு கர்நாடகாவோடதானே...”
ரகு கேட்க மைத்தி இன்று மேட்ச் ஆரம்பித்தது முதல் நடந்த அனைத்தையும் கூறினாள்....
“பாட்டிங் போது வேணும்ன்னே துளசியை அவுட் பண்ணினா ரகுண்ணா... அதே மாதிரி நான் பந்து போடும்போது ரெண்டு வாட்டி கேட்ச் விட்டா... அதுவும் ரொம்ப சுலபமா பிடிக்கற கேட்ச்... இதையெல்லாம் பார்த்தா நாங்க விளையாடறது பிடிக்காம பண்றா மாதிரியே இருக்கு.... ஆனா அவா பண்ணினது கோச்சுக்கு தெரியுமா தெரியலை..... நாங்க நன்னா விளையாடலைன்னு எங்களை எடுக்காம விட்டுட்டா....”
“இதெல்லாம் உங்க யூகம்தானே மைத்திம்மா.... நீங்களே இவ்ளோ கவனிச்சிருக்கேள்... அப்போ உங்க கோச்சுக்கு இன்னும் அனுபவம் ஜாஸ்தி.... அவர் உங்களைவிட அதிகம் கவனிச்சிருப்பார்.... மத்தவா தப்பு பண்ணி இருந்தானா கண்டிப்பா அவர் பார்வைல பட்டிருக்கும்... நல்லதே நினைப்போம்.... நீயும் துளசியும் கஷ்டப்பட்டு பயிற்சி எடுத்திருக்கேள்... அது வீணாப் போகாது ....”
“பார்க்கலாம் ரகுண்ணா.... கோச் எல்லாரோடையும் ஏழு மணிக்கு பேசறேன்னு சொல்லி இருக்கார்.... என்ன ஆறதுன்னு பார்க்கலாம்....”
“சரிடா குட்டி... என்ன ஆனாலும் நீ கவலைப்படாத.... இந்த ஒரு மேட்ச்தான் வாழ்க்கை கிடையாது.... இந்த போட்டி முழுக்க நீ விளையாடாட்டாலும் வருத்தப்படாத.... அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்... சரியா.... நாளைக்கு உனக்கு ராத்திரிதானே ட்ரைன்.... நான் கார்த்தால ஒம்பது மணிக்கு ஆபீஸ்க்கு வந்துடுவேன்... என்னாச்சுன்னு சொல்லு....”, ரகு கூற, அலைபேசியை வைத்தாள் மைத்தி...
துளசியும் தன் தந்தைக்கு அழைத்து அன்று நடந்ததை கூற அவரும் அவளுக்கு ஆறுதல் அளித்து தன்னம்பிக்கையோடு இருக்கும்படி அறிவுரை கூறினார்....
மைத்தியும், துளசியும் விடுதியை அடைந்து குளித்து பின் ஏழு மணி அளவில் கோச்சை சந்திக்க பொது அறைக்கு சென்றனர்...