அவர்கள் ஜீப்பில் ஏறிக் கொள்ள ஜீப் கோவில்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்தது.
"அம்மா… நீங்க ரொம்ப மென்மையானவங்க…" என்று ரேச்சல் ஷீலாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.
" ஏன் அப்படி சொல்கிறாய்?' என்று ஷீலா கேட்க..
"நேற்று நீங்க சொன்ன கதையை கேட்டதுக்கு அப்புறம் எனக்கு இதுதான் தோணுச்சு. உங்களை சந்தேகப்பட்டு உங்களோட திருமணத்தை நிறுத்தி உங்க வாழ்க்கையை அப்பா கெடுத்தார். ஆனால் அவரை மன்னித்து அவரையே கல்யாணம் பண்ணி இருக்கீங்க. அதுக்கு அப்புறமும் உங்களுக்கு நிம்மதியான வாழ்க்கை இல்லை. உங்களுக்கு என்று ஒரு குழந்தையையும் பெற்று கொள்ளவில்லை. நீங்க விருப்பப்பட்ட மாதிரி நானும் உங்ககிட்ட நடந்துகிடலை. ஆனாலும் உங்க மனசுல இருக்கிற அன்பு எதுவுமே குறையாமல் இருக்கேம்மா" என்றாள்.
"என்னோட கல்யாணத்தை நிறுத்தி உங்கப்பா எனக்கு உபகாரம்தான் செஞ்சார். ஒருத்தனை மனசுல வச்சுகிட்டு இன்னொருத்தனை கல்யாணம் செய்துட்டு வாழற வேதனையில் இருந்து தப்பிச்சேன். அதனாலதான் நான் மேற்படிப்பு படிக்க முடிஞ்சது. ஆனால் மேத்யூஸ் உண்மையை தெரிஞ்சுக்காமல் என்னை தண்டித்தது வலித்து கொண்டுதான் இருந்தது. உனக்காக நான் அவரை கல்யாணம் பண்ணி கிட்டேன். மேத்யூஸ் சின்ன குழந்தையை வைத்துக் கொண்டு கஷ்டப்பட கூடாது என்று நினைச்சேன். அவரும்கூட தன்னுடைய தவறுக்கான தண்டனையாகதான் என்னை திருமணம் செய்துகிட்டார். " நிறுத்தி குரல் மெலிய தொடர்ந்தார்.
" தண்டனைகள் அழகான வாழ்க்கையை தராது ரேச்சல்…. நானும் ஒருநாளும் எஸ்தருடைய இடத்தை அடைய நினைக்கவில்லை. ஆரம்பத்தில் மேத்யூஸ் மீது வருத்தம் இருந்தது. நாளடைவில் அது குறைந்து போய் நல்ல நண்பர்களாக மாறிப் போனோம். எனக்குனு ஒண்ணு பொறந்ததுனா உன்கிட்ட இருக்கற பிரியம் குறைஞ்சிடுமோனு ஒரு முட்டாளதனமான கவலை இருந்தது.. அதான் பெற்றுக் கொள்ளவில்லை. இது என்னோட முடிவுதான்."
"போதும்மா… நான் இப்ப உங்களை நல்லா பார்த்துக்கறேன்தானே…"
"ரொம்ப… என்னோட இத்தனை வருட தவத்திற்கான பலனாக அன்பு மழையை கொட்டி என்னை திணற வைக்கிறாய்.. "
"இன்னும் இன்னும்… செய்வேன். ஆயுசு முழுக்க உன்கூடவே இருப்பேன். உங்கம்மா மாதிரி உன்னை பார்த்துப்பேன்… என் செல்லம்… ஐவ் யூ ஸோ மச் மா…" என்று முத்தமிட்டாள். ஷீலாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
'இந்த அன்பு போதும்… இறைவா உனக்கு நன்றி'
தொடரும்
Next episode will be published on 29th Sep. This series is updated weekly on Tuesday evenings.