அழைத்துவர எண்ணுகிறார். ஏனெனில் அவளுக்கு காலில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. அவள் கண்டிப்பாக
ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னதால் அவளை நாகர்கோயிலுக்கு அழைத்து வர அவர் சென்றிருந்தார்.
ரயிலில் முன்பதிவு செய்ய முடியாத காரணத்தால் அவர் நீண்ட தூர பயணமாக பேருந்தை தேர்ந்தெடுத்திருந்தார். அது சொகுசு பேருந்துதான்… படுத்துக் கொண்டே பயணம் செய்யும் வசதி உடைய ஸ்லீப்பர் பேருந்து. அதில் அவர்கள் ஏறினார்கள்.
ரேச்சலின் உடல்நிலையை கருத்தில் கொண்டு லோயர் பெர்த்தில் இரட்டை படுக்கை வசதி உடைய கேபினை அவர் தேர்ந்தெடுத்து இருந்திருந்தார். அதேபோல் அதிர்வுகள் அதிகம் ஏற்படாமல் இருக்க சக்கரத்திற்கு மேலாக இல்லாமல் இரண்டாவது கேபினை அவர் தேர்ந்தெடுத்திருந்தார். அதாவது பேருந்தில் ஏறுபவர்களின் கண்ணில் அவர்களுடைய கேபின்தான் முதலில் படும்.
சென்னையிலிருந்து பேருந்து கிளம்பவும் மகளிடம் பேச ஆரம்பித்தார். அவருக்கு அந்த உரையாடல் அவசியமாக பட்டது. ஏனெனில் அவள் இனி ஷீலாவுடன் இணக்கமாக இருக்க வேண்டுமெனில் அவரைபற்றிய புரிதல் ரேச்சலுக்கு இருக்க வேண்டும். அதனால் இளம் வயதில் நடந்த அத்தனை விஷயங்களையும் ரேச்சலிடம விளக்கினார்.
"ஓ... ஷீலாம்மா ரொம்ப பாவம்தான். இதை ஏன் நீங்க இத்தனை நாள் என்னிடம் சொல்லாமல் வெச்சிருந்தீங்க?"
"நான் கோபப்பட்டு ஷீலாவுடைய கல்யாணத்தை நிறுத்தியது நம்ம வீட்ல யாருக்குமே தெரியாது. அதனால உன்னிடமும் அந்த விஷயத்தை சொல்லவேண்டாம்னு நெனச்சேன். என்னால ஷீலா பாதிக்கப்பட்டதால தான் நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நீங்க நினைக்கிற மாதிரி நான் பழைய காதலை நினைத்து கல்யாணம் பண்ணிக்கொள்ளவில்லை. அதை நீ புரிந்து கொள்ளனும். அதாவது எஸ்தரிற் மரடத்திற்காக நாங்க காத்து இருந்தது போல அனைவரும் நினைத்து இருந்தது தவறு.. இதை நீயாவது புரிஞ்சிக்கணும்"
"நீங்க பண்ணது தப்பு என்று புரிந்த அப்புறம் நீங்க அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டு இருக்கலாம். அதை விட்டுட்டு ஏன் நீங்க அவங்கள கல்யாணம் பண்ணிட்டீங்க?. அதுதானே இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம்"
" அது அந்த ஊர் பழக்கம். கல்யாணம் மேடைவரைக்கும் வந்துட்டு நின்னு போயிடுச்சுன்னா திரும்ப அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகாது. ஷீலா கிராமத்துல அதுதான் பழக்கம். அதை சரி பண்ண என்னாலதான் முடியும் என்று நினைத்து நான் அதை பண்ணினேன்."