தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 10 - ஜெபமலர்
தன் தாயின் வார்த்தைகள் மனதிற்குள் ஏதோ செய்ய எது உண்மை எது பொய் என்று உணர முடியாமல் தவித்தான் ராகவ்.
ஏனோ அவனுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லவே பிடிக்கவில்லை. அன்று முழுவதும் தன் அறைக்குள்ளேயே முடங்கிக் கொண்டான்.
காலையில் ராகவ் வீட்டை விட்டு சென்றதும் குயிலி தியானத்தில் அமர்ந்தாள். அவளுக்கு சில காரியங்கள் நிழல் போல தெளிவில்லாமல் தெரிந்ததால் குழப்பங்கள் அதிகரித்துக்கொண்டே இருந்தது.
தாத்தா ஒரு தடவை சொன்னது அவளுக்கு நினைவு வந்தது. உனக்கு குழப்பமான ஒரு சமயம் ஏற்படும் பொழுது இந்த தியானத்தை செய் என்று அவர் பிரத்தியேகமாக சொல்லிக் கொடுத்த அந்த தியானத்தை செய்து கொண்டிருந்தாள். அந்த தியானத்தின் பலனால் அவள் பல காரியங்களை அறிந்து கொண்டாள்.
சிறு வயதில் இருந்தே அவள் ராகவ்வுடன் விளையாண்ட அனைத்து நிகழ்வுகளும் அவளுக்கு நினைவுக்கு வர அவளுக்கே ஆச்சரியமாக தான் இருந்தது.
குயிலி என்று முதன்முறையாக சொன்னபொழுது அவள் பேசிய வீர வசனம் அவளுக்கு நினைவுக்கு வர அதேபோல குழந்தை பருவத்தில் அவள் ஒருமுறை செய்து காட்டியதும் அவள் மனக்கண்ணில் காட்சியாக இருந்தது.
இப்போது அவளுக்கு ஓரளவு எல்லாமே தெளிவாக புரிந்தது. ஆனாலும் இன்னும் பல குழப்பங்கள் இருக்க என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தாள்.
முதலாவது ராகவ்வை பார்த்து தானும் அவனும் சிறு வயதிலேயே பழகி நாட்களை பற்றி சொல்ல வேண்டும். அவனுக்கு ஏதாவது தெரிகிறதா என்று பார்க்க வேண்டும். அவனுடைய தாய் தகப்பனிடம் கேட்டால் என்னுடைய கடந்த காலம் நிச்சயமாக தெரியவரும் என்று நினைத்தவள் சாயங்கால வேளையில் ராகவ்வை தேடி அவன் வீட்டிற்கு சென்றாள்.
அவன் கூறிய அட்ரஸ் வைத்து ராகவ் வீட்டின் முன் இறங்கியவள் அந்த பிரமாண்டமான கட்டிடத்தைப் பார்த்து சற்று அதிர்ந்து விட்டாள். இவ்வளவு பெரிய வீடா.... அப்போ அவன் எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தன்னிடம் எவ்வளவு அன்பாக நடந்து கொண்டான் என்று உள்ளுக்குள்ளேயே மெச்சிக் கொண்டு அவள் வாயில் நின்ற வாட்ச்மேனிடம் சென்று தான் ராகவ்வை சந்திக்க வேண்டும் என்று கூறினாள்.
முதலில் மறுத்த வாட்ச்மன் பின்னர் அவள் நான் நிச்சயமாக பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் புஷ்பாவிற்கு அழைத்து விவரத்தை கூறினார். அவர் உள்ளே விடுமாறு சொல்ல வாட்ச்மேனும் குயிலியை உள்ளே விட்டான்.