பயன்படுத்துவோம்க்கா. இன்னும் சொல்லப்போனா இங்கே பெரும்பாலோனோர் இன்னும் சாம்பல்தான் பல்பொடியா பயன்படுத்தறாங்க. அப்படி பயன்படுத்தும்போது எந்த நோயும் வரலை. ஆனால் நல்லது நல்லதுன்னு விளம்பரம் பண்ற பொருட்களை வாங்கி பயன்படுத்துன பிறகுதான் எல்லா நோயும் வருது.” என்று தன் ஆதங்கத்தைக் கூறினான்.
“அம்மா. அக்காவுக்கு காபி.” என்று குரல் கொடுத்தான் பரத்.
“டேய் பரத். அவள் ஒன்னும் விருந்தாளி இல்லை. அத்தையை ஏன் சிரமப்படுத்தறே.” என்று மாமன் மகனைக் கடிந்தவாறே மகாலட்சுமியைப் பார்த்தான். அந்தப் பார்வையில் கண்டனம் தெரிந்தது.
“நான் ஒன்னும் கேட்கலை.” என்று முணுமுணுத்தவாறே உள்ளே சென்றாள் மகாலட்சுமி.
அவள் உள்ளே நுழைந்த உடனே அவள் கையில் காபி தம்ளரைக் கொடுத்தாள் நீலாவதி.
“சித்தி. என்ன வேலைன்னு சொன்னீங்கன்னா நானும் செய்வேன்.”
“முதல்ல குளிச்சுட்டு வாங்க. குலதெய்வம் கோயிலுக்குப் போய் பொங்கல் வைக்கனும். அதனால் நீ தம்பியோட போய் குளிச்சுட்டு வா.”
தம்பியோட போய் குளிக்கனுமா? அவள் விழித்தாள்.
“டாய்லெட் கட்டியாச்சு. இங்கே பாத்ரூம் இல்லம்மா. கீற்றை வச்சுதான் மறைவு கட்டியிருக்கு. மாது சொல்லிக்கிட்டேதான் இருந்தான். அப்புறம் புள்ளைங்களும் இங்கே இல்லையா? நாங்க மட்டும்தானே? அதனால் பாத்ரூம் கட்டலை. நம்ம போர் செட் இருக்கு. அங்கே மாது உன்னை அழைச்சுட்டுப் போவான். அங்கே குளிக்கவும் வசதியா இருக்கும். யாரும் வரவும் மாட்டாங்க. அதனால் நீங்க ரெண்டு பேரும் போய் குளிச்சுட்டு வந்துடுங்க.”
“இல்ல சித்தப்பா. நான் செல்வி கூட போய்க்கிறேனே.” தயக்கமாய் கூறினாள்.
“அவள் பச்சைத் தண்ணியில் குளித்தால் சளி புடிச்சுக்கும் என்று நேத்தே சொல்லிட்டாள். அவளுக்கும் புள்ளைங்களுக்கும் நான் வெண்ணித்தண்ணி வச்சிருக்கேன். நீ தம்பி கூடவே போய்ட்டு வந்துடு.” என்றாள் நீலாவதி.
வேறு வழியின்றி அவள் மாதவனுடன் கிளம்பினாள்.
இந்தப் பயணம் அவள் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை உண்டு பண்ணப் போகிறது என்பதை அவள் அப்போது அறியவில்லை.
வளரும்............