அதனால் தான் அவர் மறுத்துப் பேசினார். இப்போது அந்த மாணவனின் வாழ்க்கை தன்னால் பாழாகக்கூடாது என்று முடிவெடுத்தவர் இறுதியில் அவன் பரிட்சை எழுத சம்மதித்தார்.
அவன் பரிட்சை எழுத தனியறையில் இடம் கொடுத்தார்.
அவனை பள்ளிக்கு அழைத்துச் செல்வது சிரமமாக இருந்தது ராஜசேகருக்கு. தங்கள் வீட்டு கட்டை வண்டியை சுற்றிலும் கீற்றினால் கூரை அமைத்தார். அத்துடன் வேப்பிலைக் கொத்துகளை வண்டி முழுவதும் கட்டினார். அவனை குழந்தை மாதிரி வண்டியில் ஏற்றி அழைத்துச்சென்றார். சாப்பிடமுடியாமல் தவித்த அவனுக்கு அவன் பரிட்சை எழுதும்போது களைப்பு வரக்கூடாது என்பதற்காக பழச்சாறு தயாரித்து எடுத்துச் சென்று இடையிடையில் அவனைப் பருகவும் வைத்தார்.
படித்த பாடங்களைக்கூட திரும்பிப் பார்க்க முடியாது உடல் வேதனையில் தவித்த அவன் தலைமாட்டில் அமர்ந்து கொண்டு அவர் பாடங்களை படித்துக் காண்பித்தார். அதை அவன் காதால் கேட்டுக்கொண்டான். அப்படித்தான் அவன் பரிட்சை முழுவதும் எழுதினான். அப்படியும் அவனுக்கு மருத்துவப்படிப்பு படிப்பதற்கான கட் ஆப் மதிப்பெண் குறைந்துவிட்டது.
அதனால் அவனுக்கு அரசுக்கல்லூரியில் படிப்பதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. தனியார் கல்லூரியில் சேர்ந்தாக வேண்டிய கட்டாயம். அப்படி தனியார் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு தன் மாமாவால் முடியாது என்று அவனுக்கு நன்றாக தெரியும். அவர் ஏற்கனவே தன் மாமியின் எதிர்ப்பில்தான் தன்னை வளர்க்கிறார் என்று அவன் அறிவான். அதனால்தான் முடிந்தளவு தன்னால் அவருக்குத் தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொண்டான்.
இப்போது பணம் கொடுத்து படிப்பில் சேர வேண்டும் என்றால் என்ன செய்வான்?
அதுவும் அந்தளவு தொகை அவன் மாமாவால் கட்ட முடியாது. அவரும் கவலைக்குள்ளானார். யாரிடமாவது கடன் வாங்கித்தரவா என்று கேட்டார்தான். அவன் படித்து முடித்துவிட்டு வந்த பிறகு கடனை அடைத்துக்கொள்ளலாம் என்றார்.
இல்லை என்றால் நீ அடுத்த வருடம் இம்ப்ரூவ்மெண்ட் பரிட்சை எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று அடுத்த வருடம் நீ மருத்துவப்படிப்பில் சேரலாம் என்றார்.
அவன் மனம் அதற்கும் இசையவில்லை.
பரவாயில்லை என்று அவன் மதிப்பெண்களுக்கு கிடைத்த படிப்பில் சேர்கிறேன் என்றான். அதன் பிறகுதான் அவன் பிசியோதெரபி படிப்பில் சேர்ந்தான். அதில் கெட்டிக்காரனாகவும் இருந்தான்.
இப்போது தனியே கிளினிக் வைக்குமளவிற்கு வளர்ந்துமிருக்கிறான். கைராசிக்காரன் என்ற பெயரும் பெற்றிருக்கிறான். அதற்கு அவன் அத்தனை உழைத்திருக்கிறான்.
இவை எல்லாம் பரத் சொல்லச் சொல்ல அவள் கண்களை விரித்து வியந்து நோக்கிக் கொண்டிருந்தாள். அவன் தன் மாமா மீது கொண்டிருந்த பாசத்திற்கும் காரணம் இல்லாமல் இல்லை.