ஒன்றுமில்லை. வாழ்க்கையின் போக்கிலே வாழ்வதே சரியாக இருக்கும் போல என்று தன் மனதின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப தனிமையில் அமர்ந்திருந்தாள்.
ஆழ்ந்த உறக்கத்தில் புரண்டு படுத்த சந்தியா அருகில் ஜனனி இல்லாததை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தாள். மணியை பார்க்க மணி அதிகாலை இரண்டை தாண்டி இருந்தது. வேகமாக எழுந்து பாத்ரூம் சென்று பார்த்தாள். அங்கு இல்லாமல் போக சமையலறை ஹால் தோட்டம் என்று எல்லா இடங்களிலும் தேடி விட்டு அவள் எங்கேயும் இல்லாததால் பயம் மனதை தொற்றிகொள்ள ஆரம்பித்தது.
ஒருவேளை அந்த முத்து ஜனனியை தேடி வீட்டிற்கு வந்துவிட்டானோ... அவனை ஏதாவது செய்து விடலாம் என்று கோபத்தில் வெளியே வந்தவள் அவனிடம் மாட்டிக் கொண்டு விட்டாளோ என்று சந்தியாவின் கற்பனை குதிரை வேகமாக ஓட ஆரம்பித்தது.
தோட்டத்தில் தேடி அவள் முற்றத்தை கடந்து வெளியே போகும் கேட் அருகில் வந்தாள். தெருவில் சென்று பார்க்கலாமா என்று யோசித்த சந்தியா தெருவிற்கு கடந்து செல்வதற்காக பூட்டை திறக்கலானாள்.அந்த நேரத்தில் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து இந்த நேரத்துல எங்க வெளியே போகிறாய் என்ற ஜனனியின் குரல் கேட்கவும் அடச்சே எல்லா பக்கமும் தேடிட்டு கடைசில மொட்டை மாடியை விட்டு விட்டோமே என்று வேகமாக மொட்டை மாடிக்கு சென்றாள்.
அடீயே... ஆர்ஜே சொல்லிட்டு வந்து இருக்கலாம் அல்லவா... உன்னை காணவில்லை என்றதும் ரொம்ப பயந்து போய் விட்டேன் என்று சொல்ல போடீ கும்பகர்ணீ உன்னை எழுப்புகிறதை விட அந்த கும்பகர்ணனை எழுப்புகிறது ஈஸி தான் என்று அலுத்து கொண்டாள் ஜனனி.
எது எப்படியோ ஜனனி நல்ல மூடில் தான் இருக்கிறாள். அதுவரை சந்தோஷம் என்று நினைத்துக் கொண்டவள் என்னடீ அண்ணா கூட டூயட் பாட வெளியே வந்து விட்டாயா என்று கேட்டு கொண்டே ஜனனியின் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டு அவள் இடையை கட்டிக்கொண்டு தோளில் தன் முகத்தை சாய்த்து கொண்டாள்.
இப்போ டூயட் பாடுகிற மூடில் நீ தான் இருக்கிறாய் போல... உன்னுடைய ராஜகுமாரனை கண்டு பிடித்து விட்டாயா என்று பதிலுக்கு கேட்டாள் ஜனனி.
ராஜகுமாரன் கூட வேண்டாம்டீ... ஒரு சாதாரண மனுஷகுமாரன் போதும்னு தேடுகிறேன். அவன் கூட கிடைக்க மாட்டேங்கிறான் என்று அலுத்துக் கொண்டாள் சந்தியா.
நீ திருந்தவே மாட்டடீ.. உனக்காகவே காத்திருக்கிறானே உன் அத்தை பையன் அவனை கட்டிக்க வேண்டியது தானே என்று கிடைத்த இடைவெளியில் ஊசியை ஏற்றினாள் ஜனனி.