i. இதோ ஒரு காதல் கதை பாகம் 2 – அத்தியாயம் 1
18th November 2002
முதலாம் செமஸ்டர் இறுதி நாள். சொல்லிவைத்து வகுப்பு மாணவிகள் அனைவரும் சிவப்பு நிற உடை அணிந்து வந்தனர். இது ஒன்று தான் எல்லாப் பிரிவினரும் சேர்ந்து இருக்கும் கடைசி வகுப்பு. அடுத்த செமஸ்டர் அவர்கள் துறைவசம் சென்று புதிய வகுப்பினருடன் பயிலத் தொடங்குவார்கள். இரண்டாவது பாடவேளை , இன்ஜினியரிங் மெக்கானிக்ஸ் சார் பரீட்சைக்குத் தயாராகும் விதம் பற்றி பேசிக்கொண்டு இருந்தார். எல்லாரும் அதைக் குறிப்பெடுத்துக் கொண்டு இருந்தார்கள். ரம்யாவும் தான்.
வெளியே ஓர் குரல், "எக்ஸ்கியூஸ் மீ , சார் " என்றது.
சார் "எஸ்" என்றார்.
வெளியில் நின்றது வேறு யாருமல்ல தினேஷ்.
இந்த கிளாஸ் ரம்யாவை பிசிக்ஸ் டிபார்ட்மென்ட் சாந்தி மேம் கூப்பிட்டுட்டு வரச் சொன்னங்க சார்.
ரம்யா எழுந்து "சார்" என்றாள்.
" யூ மே கோ " என்றார்.
“தேங்க்யூ சார்” என்றவாறே வெளியில் சென்றாள். மனதுக்குள் சாந்தி மேம் இவன் கிட்ட போய் என்னை ஏன் கூட்டிட்டு வர சொன்னாங்க ? மேடத்திற்கு வேற யாருமே கிடைக்கலையா ?அதுவும் இவனை விட்டு ? என்ற சிந்தனையுடன் அவன் பின் நடந்தாள்.
“எதுக்குக் கூப்பிட்டாங்க?” அவரசமாக ரம்யா கேட்க..
“மாடில லேப்ல தான் இருக்காங்க. நீங்களே கேட்டுக்கோங்க !”
மாடிப்படி ஏறினார்கள் . நான்கு படிகள் ஏறியதும் தினேஷ் சட்டென்று நின்றான்.
“ரம்யா ஒரு நிமிஷம்!”
என்ன ?
தன் கையில் இருந்து நான்காக மடித்த ஒரு பேப்பரை நீட்டினான் தினேஷ்.
“என்னது இது? என்கிட்டே தரச் சொல்லி பிசிக்ஸ் மேடம் குடுத்தாங்களா?”
“இல்ல ! மேடம் உன்னைக் கூப்பிடவில்லை!”.
“நான் தான் உன்னைக் கூப்பிட்டேன். இதைக் கொடுக்க. பிரிச்சுப் பார்.”
பிரித்தாள் .
அதில் "ஐ லவ் யூ " என்று செந்நிறத்தில் ரத்தத்தால் எழுதி இருந்தது.
பதறிப் போனாள் ரம்யா.