தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 19 - ஜெய்
Hi Friends,
Hope all of you are well.... sorry சொல்லாம கொள்ளாம ரெண்டு வாரம் லீவ் எடுத்துட்டேன்.... நவராத்திரி வேலை இருந்ததால அப்டேட் கொடுக்க முடியலை... கதை எப்படி போகுதுன்னு சொல்லுங்க... ரொம்ப இழுக்கறா மாதிரி இருந்தா அதையும் சொல்லுங்க.... நன்றி
மருத்துவ மனையிலிருந்து ஷியாமளாவும், கிருஷ்ணனும் தங்களுக்கு தெரிந்த மருத்துவரை பார்க்க செல்ல மற்றவர்கள் வீடு திரும்பினார்கள்...
மைத்தி தவிர மற்ற அனைவரும் பள்ளி, கல்லூரி சென்றிருந்தனர்.... மைத்தி வெளிநாடு செல்வதால் இரண்டு நாள் முன்பிருந்தே பள்ளியில் விடுப்பு அனுமதித்திருந்தனர்....
ஷியாமளாவும், கிருஷ்ணனும் தங்கள் குடும்ப மருத்துவரை சந்தித்து அனந்துவின் ரிப்போர்ட்டை காண்பித்து அரசாங்க மருத்துவர் கூறியதை சொல்ல, அவரும் அனைத்தையும் பார்த்துவிட்டு அறுவை சிகிச்சை தவிர வேறு வழியில்லை என்று கூறி அரசாங்க மருத்துவர் என்ன கூறுகிறாரோ அதை அப்படியே பின்பற்ற கூறினார்... தவிர வேறு மருத்துவமனைகளுக்கு போனால் ஆகக்கூடிய செலவையும் கூற... கண்டிப்பாக தங்களால் அந்த செலவைத் தாங்க முடியாது என்பதால் அரசாங்க மருத்துவ மனையிலேயே அனந்துவின் சிகிச்சையை தொடர முடிவு செய்தனர் ...
இருவரும் மறுபடி அரசாங்க மருத்துவரை சந்தித்து தாங்கள் அறுவை சிகிச்சைக்கு சம்மதிப்பதாக கூறி அதற்கு ஏதேனும் பணம் தயார் செய்ய வேண்டுமா என்று கேட்டனர்...
மருத்துவரும் வெளியிலிருந்து சிறப்பு மருத்துவர் வருவதால் குறிப்பிட்ட தொகையை கூற அதுவே அவர்களின் வசதிக்கு சமாளிக்க முடியாததாக இருந்தது.... அதையும் தவிர மருந்து, மாத்திரை என்று அதற்கு வேறு கணிசமான தொகை செலவழிக்க வேண்டும்..... அறுவை சிகிச்சை, அதன் தொடர்ச்சியாக மருத்துவ சேவை, அது தவிர போக்குவரத்து என்று கிட்டத்தட்ட முப்பதாயிரம் வரை செலவிருக்கும் என்று கணக்கு போட பணத்திற்கு என்ன செய்வதென்ற யோசனையுடன் மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்தனர்....
எண்பது, தொண்ணூறுகளின் காலகட்டத்தில் முப்பதாயிரம் என்பது மிகப்பெரிய தொகை... அதுவும் கீழ் மத்திய தர குடும்பத்திற்கு கைக்கும், வாய்க்குமான இழுபறியில் மாதம் நூறு, இருநூறு சேர்ப்பதே பெரிய விஷயம் எனும்போது எங்கிருந்து ஆயிரக்கணக்கில் சேர்ப்பது.... இரண்டு பேர் குடும்பத்தில் சம்பாதித்தாலும் வருமானம் என்பது குறைந்த அளவிலேயே இருக்கும்.... முக்கால்வாசி குடும்பங்கள் கடனில்லாமல் வாழ்வதே பெரிது என்பதே நிலை....