விலாசத்தைத் தருவார். நாம அந்த வக்கீலைப் பார்த்து பேசிப் பார்ப்போம்....."
" நிரஞ்சன்! சம்மதிக்க வைக்கிறேன்னு சொல்லுங்க! நீங்க மனசு வைச்சா எதுவும் நடக்கும்....."
இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்னை தலைதூக்குமே என்ற பயம் நிரஞ்சனுக்கு வந்தது.
ஆண்டவனை நம்பி, நல்லதைச் செய்வோம் என தீர்மானித்தார்.
போனில் அழைப்பு வர, எடுத்துப் பேசினார் நிரஞ்சன்!
" செட்டியார் பேசறேன் ஒரு விண்ணப்பம்! அவசரமா உங்களிடம் மட்டும் தனியா பேசணும், ஓட்டலுக்கு வர முடியுமா?"
" என்ன விஷயம்?"
" நேரிலேதான் சொல்ல முடியும். தயவு பண்ணுங்க!"
" பெரிய வார்த்தைகள் சொல்லாதீங்க! பெரியவர் நீங்க! கட்டாயம் வரேன். ஏதாவது நான் இங்கிருந்து எடுத்து வரணுமான்னு தெரிய காரணத்தை கேட்டேன், தப்பா நினைக்காதீங்க! இதோ கிளம்பிட்டேன்."
நிரஞ்சன், மனைவி கலாவை பார்த்தான்.
" கவலைப்படாதீங்க! அவர் கேட்பது நியாயமா இருந்தா செய்வோம், இல்லேன்னா முடியாதுன்னு தயங்காமல் சொல்லிடுங்க! எந்தச் சூழ்நிலையிலும் பழையபடி சூதுவாதுலே மாட்டிக்காதீங்க தைரியமா போய்ட்டு வாங்க!"
செட்டியாரின் அறைக்கு சென்றதுமே, அவரே ஓடிவந்து நிரஞ்சனை கட்டித் தழுவி கண்களில் நீர் மல்க, நா தழுதழுக்க, " நீங்க, எனக்கு அப்பன் உச்சிப்பிள்ளையார் அனுப்பியிருக்கிற அவதாரம்! எல்லா பொறுப்பையும் உங்க கையிலே ஒப்படைக்கப் போறேன்......."
" உணர்ச்சிவசப்பட்டு அவசரமா வார்த்தைகளை கொட்டிடாதீங்க! இன்னும் உங்களுக்கு என்னைப்பற்றி முழு விவரமும் தெரியாது. அதனாலே, போகப் போக என்னை நல்லா புரிஞ்சிண்டு நம்பிக்கை வைங்க! எனக்கும் உங்களிடம் பரிபூரண உறவு வளர்த்துக்க ஆசைதான்! ஆனால், நான் ஒரு மத்தியதர வர்க்கம்! நீங்களோ, பெரிய செல்வந்தர்! மலையும் மடுவும்போல........."
" நிரஞ்சன்! நான் பரம ஏழ்மையிலிருந்து ஒரு நல்ல மனசு செல்வந்தரால் கை தூக்கிவிடப் பட்டவன்! இந்தப் பணத்தைவிட, மனித தன்மை அவசியம்.
சாம்புவை வெளியிலே அனுப்பிட்டேன். உங்களிடம் தனிமையில் பேச துடிச்சுக் கொண்டிருக்கேன்....முதல்லே சிற்றுண்டி வரவழைக்கிறேன், சாப்பிட்டுவிட்டு பேசுவோம்."
சாப்பிட்டுக்கொண்டே செட்டியார் அந்தரங்கமான விஷயங்களைப் பேசினார்.