இதெல்லாம் மீராவின் குணமில்லையே…
ப்ச்… அப்படி சொல்ல முடியாது. சௌம்யா சொன்ன விவரங்களில் மீராவின் குறும்புத்தனமான இளவயது நடவடிக்கைகள் இருந்தனவே… ஒரு ப்ரஷரில் அவை அடக்கி வைக்கப்பட்டிருந்தாலும் சுதந்திரமாக அவள் உணரும்போது அதிரடியாக வெளிப்பட்டிருக்கும். அப்படி ஒன்றும் அவள் தவறாக நடந்து கொள்ளவில்லையே… சரியானதை அடாவடியாக செய்தாள் அவ்வளவே…
அவன் அந்த புதிருக்கான விடையை கண்டு பிடித்து விட்டதாக நினைத்தான். உடனே இதனை உறுதி செய்தாக வேண்டும் என்று தீர்மானித்தான். விமானம் டெல்லியில் தரையிறங்கிய உடனேயே மதுரைக்கு செல்லும் விமானத்தில் ஏறினான். நல்லவேளையாக அந்த விமானத்தில் ஒரு இருக்கை காலியாக இருந்தது.
விமானம் கிளம்பியது… அவனுடைய மனம் இதைவிட விரைவாக செல்லும் வழி ஏதும் இல்லையா என்று ஏங்கியது. இந்த விஷயத்தை ரஞ்சனிடம் பகிர்நது கொள்ள நினைத்தான்.
வேண்டாம்… அவன் ஏற்கனவே நிறைய குளறுபடிகள் செய்து விட்டான். இதிலும் தவறாகிப் போனால் அவனுடைய நம்பிக்கை உடைந்து போகும்… எதுவானாலும் நேரடியாக டீல் செய்து கொள்ளலாம்…
இந்த ஆள்மாறாட்டம் எப்படி நடந்திருக்கும்…?. விபத்தின்போது மேத்யூஸ் மட்டுமே ரேச்சலுடன் இருந்தார். அவர் ரேச்சல் என்று மீராவை பிடித்து இழுத்திருப்பாரோ… அடையாளம் தெரியாமல் போனதால் மீராவை ரேச்சல் என்று நினைத்திருக்கலாம்… இருவரும் ஒத்த வயதுடையவர்தானே… இறைவா அப்படித்தான் நடந்திருக்க வேண்டும்… ரேச்சலுக்கு திருமணம் நடந்ததென்று ஷீலாவும் சொல்லவில்லை. அவர் அப்படி மறைப்பது போலவும் தெரியவில்லை… அவன் இலக்கில்லாமல் சிந்தித்துக் கொண்டு இருந்தான்.
மதுரையை விமானம் அடையவும் காரில் ஏறி விரைவாக தாத்தாவின் வீட்டை அடைந்தான். அவன் திட்டமிட்டபடி உண்மையை தெரிந்து கொள்ள மெனக்கெட வேண்டி இருக்கவில்லை. ரஞ்சன் அவனை பார்த்து ஆச்சரியப்பட்டாலும் அவனுடைய வரவு மகிழ்ச்சியை தந்தது.
ஜெமி அவனிடம் சொன்ன விஷயத்தை சத்யனிடம் தெளிவாக விளக்கினான். அதை கேட்டபின் சத்யனுக்கு நிம்மதியானது… மீராதான் ரேச்சல்..! அவளை உடனடியாக பார்த்தாக வேண்டும்… என்ற பரபரத்தான். எவ்வளவு பெரிய தேடல்… அத்தனையும் முடிவிற்கு வந்து விட்டது… மனம் லேசாகிப் போனது.
என் செல்ல மீரா… என் உயிரே… உன்னை நான் கண்டுபிடித்து விட்டேன். என் கண்ணீருக்கு பலன் கிடைத்து விட்டது… நீண்ட இரவு முடிவிற்கு வந்து விட்டது… என் வாழ்க்கையின் விடியல் தொடங்கி விட்டது. அவன் கண்கள் கலங்குவதை கண்ட மகேஸ்வரன் அவனை