இருக்கு! உண்மையிலேயே பல்வலி தானான்னு தெரியல! எதுக்கும் ஒரு மவுத்வாஷ் தரேன். அதை வச்சு வாய்க் கொப்பளிச்சு பார்க்க சொல்லுங்க!” என்று சொல்லிவிட்டார்.
அம்மா, “நீ அவர்கிட்ட எந்த பல் வலிக்குதுன்னு சரியா சொன்னியா, இல்லை பயந்துட்டு எதுன்னு சொல்லலையா?” எனவும் , சரியாகத்தான் அம்மா சொன்னேன் என்றாள் ரம்யா. இவர் நல்ல பார்க்கலையோ என்னவோ. ஜி. ஹெச் ல இருக்கிற டென்டிஸ்ட் லேடி டாக்டராம், சாயங்காலம் தன் வீட்டுக்கு முன்னாடியே இருக்கிற கிளினிக்கில பார்ப்பாங்களாம். அவங்ககிட்ட வேணா நாம் போய் உன் பல்லை செக் பண்ணுவமா? அம்மா கேட்கவும்,”இல்லைமா, இந்த மவுத்வாஷ் யூஸ் பண்றேன். சரி ஆகலைனா போவோம்.” பதில் சொன்னாள்.
டென்டிஸ்ட் என்ன சொன்னாரு. அவர் இவ பல்லு பூரா நல்லாத்தான் இருக்குன்னு சொல்றாரு அப்பா கேட்ட கேள்விக்கு அம்மா பதில் சொல்லவும், சின்ன புள்ளைல கடலைப் பார்க்கப் போறேன்னு திருசெந்தூர்ல மாடிப்படில உருண்டு முன்பல்லு இரண்டை உடைச்சாளே, ஒன்னுமேல ஒன்னு முளைச்சிட்டு இருந்தது, இப்போ வலிக்குதோ. என்றார் சிறுவயதில் அவள் பட்ட அடியைக் கூட இன்றுவரை மறவாமல். என்னதான் பல்லுல பிரச்சினைன்னு தெரிலங்க, வாய் கொப்பளிக்க ஒரு திரவத்தைக் கொடுத்திருக்காரு என்று அம்மா சொல்ல, அவளுக்கு பல்வலி சரியாகலைன்னா அந்த ஜி.ஹெச் டென்டிஸ்ட் லேடி டாக்டர் கிட்ட நாளைக்குக் கூட்டிட்டுப் போய் காட்டிரு என்று அப்பா சொல்லவும், அம்மாவும் ஆமோதித்தார்,
மறுநாள் அந்த லேடி டென்டிஸ்ட் செக் செய்துவிட்டு, இன்னும் சிறு வயதிலேயே வந்திருந்தால், அந்த முன்பற்களை நேராக கிளிப் போட்டு சரி செய்திருக்கலாம் என்று சொல்லிவிட்டு, பற்களில் ஃப்ளுரைட் அதிகமாக இருக்கிறது, கிளீன் பண்ணவேண்டும் என்றுவிட்டார். அவர் கிளீன் பண்ணிமுடித்த பின்னர், அவளின் வலப்பக்க கன்னமே வீங்கிவிட்டது. அவளால் எதுவும் பேச முடியவில்லை. ஐஸ் ஒத்தடம் கொடுத்தாள் வீக்கம் சரியாகிவிடும் என்று பீஸ் வாங்கிவிட்டு டென்டிஸ்ட் அனுப்பி வைக்க, ரம்யாவின் தம்பி ரகுவோ, “யாருமே மூட முடியாத உன் வாயை டென்டிஸ்ட் மூடிட்டாங்க, உன்னால் எப்படியும் இரண்டு நாளைக்கு எதுவும் பேசமுடியாது! என்று கிண்டல் செய்து கொண்டிருந்தான். ஏற்கனவே சாப்பிட மறுத்தவள், இப்போது சாப்பிட முடியாத நிலையில் இருந்தாள். தன் பல்வலிக்கே துடிக்கும் அம்மா, அப்பாவிற்குத் தன்னால் எந்த மனவலியும் வரக்கூடாது என்று தோன்றினாலும். அவர்களிடம் பல்வலி என்று பொய் சொல்லிய வாய்க்குத் தண்டனையாகத் தான் இந்த வீக்கம் என்று நினைத்துக் கொண்டாள். இந்த சம்பவத்திற்குப் பின்னர், ரம்யாவும் பல் வலிக்குது என்று சொல்வதை நிறுத்திவிட்டு, ஏனோதானோவென்று உணவை உண்டவள், சில தினங்களில் திரும்பவும் சாப்பிடாமல் இருந்தாள்.