பாட்டி...
“வெறும் வயத்தோட இருந்தா இன்னும் துக்கம் கூடத்தான் செய்யும்... அதனால இந்த பாலை குடி... அப்பறம் படுத்து தூங்கு... உங்கப்பா சாயங்கால நேரத்துல கொஞ்சம் நேரம் முழிச்சுண்டு இருப்பான்... அப்போ அவனை பார்க்கலாம்...”, பாட்டி சொல்ல மறுக்க முடியாமல் பாலை குடித்த மைத்தி, தனக்கு தூக்கம் வரவில்லை என்று சொல்லி தன் தந்தையருகில் அமர்ந்துகொண்டாள்...
ஐந்து மணிபோல் அனந்து கண்விழிக்க, அவர் பார்த்தது கண் கலங்கியபடி தன் அருகில் அமர்ந்திருந்த மகளைத்தான்...
“மைத்திக்குட்டி எப்படா வந்த...”, கரகர குரலில் கேட்க ... அழுதபடியே அவரை அணைத்துக் கொண்டாள் மைத்தி ...
“அப்பாக்கு ஒண்ணும் இல்லைடா.... சீக்கிரம் சரியாய்டும்... நீ அழாத... பிரமாதமா விளையாடி கலக்கிட்டியாமே... பத்ரி சொன்னான்... அப்பாக்கு எத்தனை பெருமையா இருக்கு தெரியுமோ...”, உடையாத கையால் மெதுவாக மைத்தியின் தலை கோதியபடியே பேசினார் அனந்து... ஒரு மாதம் கழிந்து தன் பெண்ணை பார்த்த அவர் கண்ணிலும் கண்ணீர்....
அவர் அருகிலிருந்து ஓடி சென்ற மைத்தி தன் பயணப் பொதியைத் திறந்து தனக்கு கிடைத்த தொடர் நாயகி விருது, மற்றும் பிற விருதுகளை தன் தந்தையிடம் சென்று காட்டினாள்...
அதை பார்த்த அனந்துவிற்கு அத்தனை பெருமை... தன்னால் சாதிக்க முடியாததை தன் பெண் சாதித்துவிட்டாளே என்று...
“ரொம்ப சந்தோஷமா இருக்குடா குட்டி... மேல மேல இன்னும் நன்னா விளையாடி நிறைய பரிசு வாங்கணும்... இந்த சந்தோஷத்துல அப்பாக்கு வலிக்கூட மறந்து போச்சு...”, அனந்து சொல்ல கண் கலங்கியபடியே சிரித்தாள் மைத்தி...
“பாஸ்கர் சார் கிட்ட நாளைக்கு காமிச்சுட்டு வந்துடுடா மைத்தி... நீ செலக்ட் ஆகறதுக்கு அவர்தான் முக்கிய காரணம்...”, இருவரும் சற்று நேரம் பேசியபடி இருக்க, சியாமளா வந்து மருந்து கொடுக்க அதன் வீரியத்தில் மறுபடி தூங்க ஆரம்பித்தார் அனந்து...
“அம்மா அப்பாக்கு எப்ப சரியாகும்ன்னு டாக்டர் சொன்னாரா.... வெளில காமிச்சுக்காட்டாலும் அப்பாக்கு ரொம்ப வலிக்கறது போல இருக்கு... முகத்தை அடிக்கடி சுளிச்சுக்கறா...”
“கண்டிப்பா வலி இருக்கும்டா.... நிறைய இடத்துல எலும்பு முறிவு... அதெல்லாம் சேரவே நாலைஞ்சு மாசம் ஆகும்ன்னு சொல்றா... அதுக்கு பின்னாடிதான் physio ஆரம்பிக்கணும்... கொஞ்ச கொஞ்சமாத்தான் கை, கால்ல அசைவு கொண்டு வர முடியும்ன்னு சொல்லிட்டா... எப்படியும் கண்டிப்பா ஓரளவுக்கானும் சரியாக இன்னும் ஒரு வருஷமானும் ஆகும்ன்னு நினைக்கறேன்...”