பெண்கள் உலகக்கோப்பை போட்டியில் கலந்துகொள்வதற்காக ஆஸ்திரேலியத் தலைநகர் நோக்கி பயணமாக தயாராகிக்கொண்டிருக்கிறாள் மைத்தி...
மாலையாக அனைவரும் வர, மைத்தி தன் மாமா பெண்களுடன் சேர்ந்து கோவிலுக்கு சென்று வந்தாள்...
“மைத்திம்மா பாஸ்போர்ட், டிக்கெட் எல்லாம் ஒரு வாட்டி செக் பண்ணிக்கோ... நாளைக்கு மத்யானம்தானே உனக்கு ஆஸ்திரேலியா விமானம், ரகு உன்னை பார்க்க கார்த்தால நீ இருக்க இடத்துக்கு வரேன்னு சொன்னான்... அவனோட பாக்கிங் தனியா வச்சிருக்கேன்... நெனவா கொடுத்துடு... அப்பறம் இந்த சின்ன பர்ஸ்ல குல தெய்வம் பிரசாதம் வச்சிருக்கேன்.... அதையும் அவன்கிட்ட கொடு.... நோக்குத் தனியா வச்சிருக்கேன்... தினம் கார்த்தால இட்டுக்கோ.... சொன்னது எதையும் மறக்காத...”, ஷியாமளா வரிசையாக சொல்ல அனைத்திற்கும் தலையாட்டினாள் மைத்தி...
“சொன்னதையே எத்தனை தரம் சொல்லுவ சாமளா... எல்லாம் கரெக்டா பண்ணுவா அவ... மைத்திம்மா நன்னா விளையாடு... பொறுமையா இரு... யாரு எதை சொன்னாலும் காதுல போட்டுக்காத... விளையாட்டுல மட்டும் கவனம் வை.... எப்போலாம் முடியறதோ அப்போலாம் ஆத்துக்கு போன் பண்ணு....”, தன் பங்குக்கு அனந்துவும் கூற அதற்கும் சமர்த்தாக தலையாட்டினாள் மைத்தி...
மைத்தி அடிக்கடி வெளியூர் விளையாட செல்வதாலும், ரகுவும் டெல்லியில் இருப்பதாலும் பேசுவதற்கு வசதியாக இப்பொழுது இவர்கள் வீட்டிற்கே தொலைபேசி வந்துவிட்டது...
முதல் தரம் பெற்ற அனுபவமே பெரிதாக இருக்க, அதன்பிறகு எதிர் தரப்பினர் பேசும் வார்த்தைகள் இவள் காதுகளை எட்டாமல் பில்டர் செய்ய கற்றுக் கொண்டாள் மைத்தி... மைதானத்தில் விளையாட இறங்கிவிட்டால் எதிரணியை பொறுத்தவரை மைத்தி காது கேட்காத செவிடே...
இரவாக அனைவரிடமும் விடைபெற்று பத்ரியுடனும், தன் இரண்டாவது மாமாவுடனும் விமான நிலையத்திற்கு கிளம்பினாள் மைத்தி...
அனைத்துலக பெண்கள் உலகக்கோப்பை போட்டி... மொத்தம் ஆறு நாடுகள் பங்கேற்க ஆஸ்திரேலியத் தலைநகர் சிட்னியில் கோலாகலமாகத் துவங்கியது....
இந்திய அணி அபாரமாக விளையாடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது... இறுதி போட்டி இந்தியாவிற்கும், இங்கிலாந்திற்கும்...
டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் இந்தியாவை பந்தடிக்க இறக்கியது.... துளசி மற்றும் கேப்டனின் அபார ஆட்டத்தால் இருநூறு ரன்களை இந்திய அணி எடுத்தது... இருநூற்றி ஒரு