எங்கள் ஓனர்கள், பிளாட்டை விலை கொடுத்து வாங்கினார்களே தவிர, ஒருநாள்கூட இங்கு வசிக்கவில்லை. நாங்கள் தான் முதல்நாளிலிருந்து இங்கு வாழ்கிறோம்.
இங்கு வசிக்கிற பத்து ஓனர்களைப் போல, நாங்களும் எங்கள் பிள்ளை களை இந்தப் பகுதியிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்க வைக்கிறோம். நாங்கள் ஆபீஸ் போய்வரவும் வசதி செய்து கொண்டுள்ளோம்.
அதனால், உங்களுக்கு இந்த இடத்திலிருந்து வேறு இடத்துக்கு குடி போவதில், எத்தனை சங்கடங்கள் உள்ளதோ, அவைகள் எங்களுக்கும் உள்ளன.
நாங்கள் இதை சொல்லித்தான் உங்களுக்கு தெரியும் என்பதில்லை!
அப்படிப்பட்ட நிலையில் எங்களுக்கு தெரிவிக்காமலே மனையையும் பிளாட்டுகளை யும் விற்க முடிவு செய்து விட்டீர்களே, இது நியாயமா?
போதாக்குறைக்கு, எங்களை உடனே காலி செய்யச் சொல்லி மறுநாளே வற்புறுத்துகிறீர்களே, இது அநியாயம் இல்லையா?
திடீரென எங்களுக்கு இதே பகுதியில் மாற்றிடம் கிடைக்குமா? வேறு பகுதி சென்று வசித்தால், எங்கள் பிள்ளைகளின் படிப்பு பெரிய பாதிப்புக்கு உள்ளாகுமே, அதை யோசித்தீர்களா?
எங்களிடமிருந்து ஆறு மாத வாடகை முன்பணமாக வாங்கி வைத்துக்கொண்டு இருக்கிறீர்களே, அதன்படி நாங்களாகவே காலி செய்தாலும், நீங்கள் எங்களை காலி செய்யச் சொன்னாலும், ஆறுமாத நோடீஸ் தரவேண்டும் என்பது தானே அதன் பொருள்!
சட்டப்படி நாங்கள் அதை வற்புறுத்தினால், நீங்கள் பிளாட்டை விற்க முடியாது இல்லையா?
நாங்கள் அப்படி செய்து உங்களை பெரும் நஷ்டம் அடையச் செய்யாமல், உதவ முன்வந்தால், பெருந்தன்மை தானே அது? அதை புரிந்து கொண்டு எங்களுக்கு தகுந்த நஷ்ட ஈடு தரும்படி கேட்டால் அது நியாயம் தானே?
நீங்களாகவே மனம் உவந்து எங்களுக்கு என்ன தரப்போகிறீர்கள் என்பதை இப்போது கூறமுடியுமா?"
இந்தக் கேள்வியில் நிறுத்தியதும், நிரஞ்சன் ஓனர்களை நோக்கி, " நேரிடையாக இவர்கள் கேள்விக்கு பதில் கூறவேண்டிய பொறுப்புள்ள பத்து ஓனர்களில் யாரேனும் ஒருவர் இப்போது பேசலாம். அவர்கள் எப்படி ஒற்றுமையா பத்து பேரும் சேர்ந்து குரல் எழுப்பியுள்ளார்களோ, அது போல ஓனர்கள் ஒரே குரலில் பதில் சொல்லலாம். இல்லை, தனித்தனியாக அவரவர்கள் குடித்தனக்காரனுடன் பேச நினைத்தாலும் செய்யலாம். உங்களுக்குள் கலந்துபேசி முடிவு எடுங்கள்...."